சேகர் ரெட்டி, சீனிவாசலு ஜாமீன் மனு மீது நாளை மறுநாள் விசாரணை
சேகர் ரெட்டி, சீனிவாசலு ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
சென்னை: கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்களும், கட்டிக்கட்டியாக தங்கமும் வைத்திருந்த சேகர் ரெட்டியையும் அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டியும் இன்று சிபிஐ போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் ரெட்டி சகோதரர்கள் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனு நாளை மறுநாள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி. போயஸ் கார்டனுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் மிகவும் நெருக்கமான இவர் தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததராகவும், கட்டுமான தொழிலும் செய்து வந்தார். தமிழக அரசில் உள்ள உயர் அதிகாரிகளின் துணையுடன் பணம் கொட்டும் பல்வேறு துறைகளின் ஒப்பந்தங்களை் பெற்று கோடிக் கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளார்.
இதனையடுத்து சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தப்பட்டது. இதில் வருமான வரித்துறையினரால், மொத்தம் 131 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதில், 92 கோடி ரூபாய் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 171 கிலோ தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவினர் தனித்தனியே வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி ஆகியோரை சிபிஐ போலீசார் இன்று திடீரென கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை குற்றச்சதி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலுவை ஜனவரி 3ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சேகர் ரெட்டியும் அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டியும் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நாளை மறுநாள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.