'கையெழுத்து' வாங்கிக்கொண்டு லஞ்சம் கொடுத்த சேகர் ரெட்டி...சிக்கலில் தவிக்கும் மத்திய அமைச்சர்கள்!
மணல் மாஃபியா சேகர் ரெட்டி, லஞ்சம் கொடுத்த நபர்களிடம் டைரியில் கையெழுத்து வாங்கி கணக்கை மெயின்டெய்ன் செய்துள்ளார் என்றும்,அதில் மத்திய அமைச்சர்கள் உட்பட முக்கிய நபர்கள் சிக்கியுள்ளார்கள் என்றும் தகவல்
சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மணல் கொள்ளைப் புகழ் சேகர் ரெட்டி, யார் யாருக்கு லஞ்சம் கொடுத்தோம் என்று டைரி வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.அந்த டைரியில் மத்திய அமைச்சர்கள்,மாநில அமைச்சர்கள்,ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள்,பல துறை உயர் அதிகாரிகள் என்று பலரின் பெயர்களும் கையெழுத்தும் இருக்கின்றன என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள் என்றும் மிக விரைவில் அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் கூறப்படுகிறது.இதனையடுத்து தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
சேகர் ரெட்டி,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமானவர் என்றும் அவரால்தான் சேகர் ரெட்டி மணல் தொழிலில் கோலோச்ச முடிந்தது என்றும் சசிகலா அணியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.ஆனால் அதை ஓபிஎஸ் மறுத்துவிட்டார்.அது பொய்க் குற்றச்சாட்டு என்றும் பலமுறை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சேகர் ரெட்டியின் டைரி பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது என்றும் அதில் உள்ள விவரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதிமுக உட்பட பல முக்கிய கட்சிகளின் உண்மை சொரூபம் வெளிச்சத்துக்கு வரும் என்றும் தெரிகிறது.
சிக்கும் மத்திய அமைச்சர்கள்
சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது டைரி ஒன்று சிக்கியுள்ளது. அதில் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் அரசு அதிகாரிகள் 50 பேருக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக விவரங்கள் இருந்ததையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பணம் வாங்கிய அரசியல் கட்சிகள்
இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்காக அ.தி.மு.கவின் தேர்தல் செலவுக்காக சேகர் ரெட்டி பல நூறு கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும், அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மற்றும் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கும் பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் அரசு அதிகாரிகள் என்று 50 பேருக்கும் ரெட்டி பணப்பட்டுவாடா செய்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆதாரங்கள் உள்ளன
இதற்கு உரிய ஆதாரங்கள் டைரியில் இருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பணப்பட்டுவாடா செய்த பின்னர் பணம் பெற்றவர்களிடம் கையெழுத்தும் சேகர் ரெட்டி வாங்கியுள்ளார் என்றும் இதுதான் இப்போது சிக்கலாகி இரூப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி பழனிச்சாமி
ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.இந்த நிலையில் கையெழுத்துப் போட்டு லஞ்சம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.