ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: மறைமுகமாக 'குத்தும்' அழகிரி
மதுரை: தமிழகத்தில் தி.மு.க. அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அதற்கு காரணமானவர்கள் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும், என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தகுதியில்லாத வேட்பாளர்களை நிறுத்தியதே தோல்விக்குக் காரணம் என்றும் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அழகிரி கூறியதாவது:
கட்சி கையைவிட்டு போயிருச்சு
தி.மு.க., நிலை குறித்து நான் தேர்தலுக்கு முன்பே கூறினேன். கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை; அவர் எந்த விஷயங்களிலும் தலையிட முடியவில்லை; வேட்பாளர் தேர்வும் அவரது விருப்பத்திற்கு ஏற்ப இல்லை.
தகுதியில்லாத வேட்பாளர்கள்
தகுதி இல்லாத வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல மாவட்ட செயலாளர்கள் பணம் பெற்று சிபாரிசு செய்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என நான் ஏற்கனவே குற்றம் சாட்டினேன்.
என்னை நீக்கினர்
'கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது' எனவும் கருணாநிதியிடம் தெரிவித்தேன். ஆனால், இதுகுறித்து கவலைப்படாமல், மாறாக என் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்; நானும் நீக்கப்பட்டேன்.
நான் சொன்னது நடந்துவிட்டது
இப்போது, நான் கூறியபடி அனைத்து தொகுதியிலும் தி.மு.க., படுதோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்று, கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வர வேண்டும்.
தலைவரை கேட்கலை
தி.மு.க.,வில் ஒன் மேன் ஆர்மி போல செயல்பட்டனர். உட்கட்சி பூசல், கருணாநிதி தலையீடு இல்லாதது போன்ற காரணங்களால் தான் கட்சி இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
பிரசாரம் செய்ய நிர்பந்தம்
பல்வேறு நிர்ப்பந்தம் காரணமாகவே கருணாநிதி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அவர் கட்டாயத்தின் பேரில் பிரசாரம் செய்தார்.
மண்ணை வாரிப் போட்ட திமுக
'திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. கட்சியில் கருணாநிதியின் தலையீடு இல்லாததுதான் தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்றார் அழகிரி
மன்னித்து விடுங்கள்
தேர்தலுக்கு முன், தி.மு.க., ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறும்' என்று கூறினேன்; நான் கூறியது நடக்கவில்லை;அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அழகிரி.