செல்ஃப் ஆக சாகும் செல்ஃபி பிரியர்கள்... 2015ல் அதிக மரணம் செல்ஃபியால்தானாம்!!
சென்னை: உலகத்தில் சுறா தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்போரை விடவும் செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில் அதிகம் என ஒரு அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை செல்ஃபியால் 12 பேரும், சுறா தாக்கியதால் 8 பேரும் உயிரிழந்திருந்தனர். இப்போது செல்ஃபி மரணங்களின் எண்ணிக்கை 20ஐ தொட்டிருக்கலாம். குல்பி சாப்பிடாத ஆட்கள் கூட செல்ஃபி எடுத்து போடுவது அதிகரித்து வருகிறது. அதுவே உயிருக்கும் உலைவைக்கிறது. உலக அளவில் செல்ஃபி எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளையில் செல்ஃபி அடிமைகளும் அதிகரித்துதான் வருகின்றனர்.
செல்ஃபி எடுத்து அதைச் சுடச்சுட பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்களில் போடுவது என இந்தக் கால இளைய தலைமுறையினரின் முக்கியக் கடமையாகிவிட்டது. ஒன்று எங்கு சென்றாலும், எந்த நிகழ்வாக இருந்தாலும், துக்க வீட்டில் பிணத்துடன் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு செல்ஃபி மேனியா இன்று வேகமாகவே பரவிவருகிறது.
2013ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி செல்ஃபி (Selfie)என்ற வார்த்தையைக் கலைகளில் ஒரு வகையாக அங்கீகரித்து தங்கள் அகராதியில் இணைக்கும் அளவிற்கு செல்ஃபி பிரபலமாகிவிட்டது.
எப்படி தொடங்கியது செல்ஃபி
மை ஸ்பேஸ் னு ஹாட்மெயிலொட சோஷியல் நெட்வொர்க்கில்தான் இந்தத் தனக்குத்தானே போட்டோ எடுத்துக்கொள்ளும் 'செல்ஃபி' முறை தொடங்கியது. ஃபேஸ்புக் காலத்துல பரபரன்னு பரவ ஆரம்பிச்சிடுச்சு இந்த செல்ஃபி கலாச்சாரம். இந்த மாதிரி தனக்குத்தானே போட்டோ எடுத்துப் போடுறதுல உலகம் முழுக்க முண்ணனியில் இருக்கிறது பெண்கள்தானாம். இது ஒரு புறம் இருக்க, இன்று செல்ஃபி மோகம் உயிரைப் பறிக்கும் எமனாகவும் மாறி அதிர்ச்சி அளித்துக்கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல் பரிசல் விபத்து
உயிருக்கே ஆபத்தான செல்ஃபிகளை எடுப்பது பலருக்கும் விருப்பமான விஷயமாகிவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒகேனெக்கலில் பரிசல் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று நீரில் மூழ்கி இறந்ததற்கு செல்ஃபி எடுக்க முயன்றேதே காரணம் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை அதிகரித்தது ஆனாலும் செல்ஃபி எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
ரயில்மேல் ஏறி செல்ஃபி
கடந்த ஜனவரி மாதம் ரயில் மீது எறி செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவன் உயிரிழந்தான் அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே கடந்த நவம்பர் மாதம் மும்பையில் ரயில் மேல் ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற 14 வயது பள்ளி மாணவன் 25000 வோல்ட் மின் கம்பியை தொட்டு எரிந்து விழுந்து உயிரிழந்தான்.
தாஜ்மகாலில் செல்ஃபி
அதேபோல கடந்த செப்டம்பர் மாதம் தாஜ்மஹாலின் படிக்கட்டில் செல்ஃபி எடுக்க முயன்ற ஜப்பானிய மூதாட்டி தவறி விழுந்து மரணமடைந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், தவறுதலாகத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.
ஆபத்தான மரணங்கள்
ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா க்ருபெய்னிகோவா, 21 என்ற இளம்பெண் கடந்த ஜூலை மாதம் 40 அடி உயர பாலத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்று உயிரிழந்தார். இப்படி செல்ஃபிகளின் விபரீதத்தைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
செல்ஃபி பாதிப்பாளர்கள்
மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் மரண வீட்டில் செல்ஃபி எடுப்பது என்னும் அளவுக்குப் போக வேண்டுமா என்பதை செல்ஃபி விரும்பிகள்தான் சொல்ல வேண்டும். தற்செயலான விபத்து முதல் தற்கொலை வரை பல உயிர் பறிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் செல்ஃபி மோகத்தை மனநோய்களில் ஒன்றாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் மனநல அமைப்பு. இந்த நோய்க்கு செல்ஃபிடிஸ் என்று பெயரிட்டு, இந்த பாதிப்புள்ளவர்களை மூன்று பிரிவினராக பிரித்துள்ளது.
எத்தனை அடிமைகள்
பார்டர்லைன் செல்ஃபிடிஸ் இது ஆரம்பகட்ட பிரச்னை.இவர்கள் ஒருநாளில் குறைந்தது 3 முறை தங்களை செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். ஆனால், சமூகத்தளங்களில் வெளியிடமாட்டார்கள். அக்யூட் செல்ஃபிடிஸ் இவர்களுக்கு ஒரு நாளைக்கு தங்களை குறைந்தது 3 முறையாவது செல்போனில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடவில்லை என்றால் தூக்கம் வராது.
லைக் விழணும்
க்ரோனிக் செல்ஃபிடிஸ் நாள் முழுவதும் செல்போனில் தன்னைத்தானே படம் எடுப்பதும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும், அதற்கு வரும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைவதும்தான் இவர்களின் வேலையே. இவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை. தகுந்த நேரத்தில் சிகிச்சை கொடுக்காவிட்டால் பெரிய அபாயங்களில் சிக்கிக் கொள்வார்கள்.
சிகிச்சை என்ன?
இந்த செல்ஃபிடிஸ் நோயை ஓசிடி எனப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயாக அறிவிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். இப்போதைக்கு இந்த மனநோய்க்கு மருத்துவம் இல்லை என்றும், Cognitive Behavioural Therapy எனும் ‘அறிவாற்றல் ஒருங்கிணைப்பு சிகிச்சை' மட்டுமே தற்காலிகத் தீர்வு என்றும் எச்சரிக்கிறது அமெரிக்கன் சைக்யாட்ரிஸ்ட் அசோசியேஷன்!
மாத்திரை வந்தாச்சு
அடிக்கடி செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொள்வோருக்கு, அந்த மோகத்தில் இருந்து விடுபட இந்த ஆண்டு ஆன்டி செல்ஃபி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்குக் கூடவா மாத்திரை என்று ஆச்சரியப்படும் நமக்கு அதில் மற்றொரு ஆச்சரியமும் சேர்ந்திருக்கிறது.
யாருக்கு எத்தனை மாத்திரை
அந்த மாத்திரையின் பெயர் 'ANTI-Selfie Tabs'. ஆண்களுக்கு என்றால் 1 மாத்திரை, பெண்களுக்கு 3 மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம். செல்ஃபி மோகத்தால் ரயில் மீது ஏறியும், மலையின் உச்சியில் இருந்தும் புகைப்படம் எடுக்கும் போது பலர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த மாத்திரை வந்திருப்பது நல்ல விசயம்தான். யாருக்கு எல்லாம் செல்ஃபி ஆசையிருக்கோ அவங்க எல்லாம் இதை வாங்கி சாப்பிடுங்க... செல்ஃபி அடிமைகளே 2016ம் ஆண்டிலிருந்து செல்ஃபியே எடுக்க மாட்டோம்னு தீர்மானமே போடுங்க சரியா...