ஈரோட்டில் குளத்தின் கரையை வெட்டி மணல் விற்பனை.. லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!
குளத்தின் கரையை வெட்டி விற்பனை செய்வதாக எழுந்த புகாரால் லாரி சிறைபிடிக்கப்பட்டது.
Recommended Video
ஈரோடு: ஈரோட்டில் குளத்தின் கரைகளை வெட்டி மணலை விற்பனை செய்வதாக எழுந்த புகாரினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி 17-வது வார்டில் அமைந்துள்ளது கனிராவுத்தர்குளம். இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தி குளம் மீட்பு இயக்கத்தினர் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அரசின் சார்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் குளம் தூர்வாரப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையின் காரணமாக தற்போது குளத்தில் ஓரளவு தண்ணீர் உள்ளது. ஆனால் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் குளத்தின் கரைகளை வெட்டி மணலை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆளும் கட்சியினரும் மாநகராட்சி அதிகாரிகளும் மணலை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், மணல் அள்ள வந்த லாரியை நேற்று சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுவரை சுமார் 500 லோடுகள் வரை மணல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால் மழைகாலங்களில் குளத்தின் கரை உடைந்து அருகில் உள்ள குடிசைகளுக்குள் தண்ணீர் புகும் வாய்ப்புள்ளதால் மணலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.