உங்கள் ஓட்டு "தர்மயுத்த" நாயகனுக்கே... செல்லூராரின் குசும்பை பாருங்க!
வேட்பாளர் மதுசூதனனை தர்மயுத்த நாயகன் என்ற புகழாரம் சூட்டினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
சென்னை: வேட்பாளர் மதுசூதனனை தர்மயுத்த நாயகன் என்றும், ஜெயலலிதாவின் முரட்டுபக்தன் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இரட்டை இலை கிடைத்த கையோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சந்திக்கிறது. இந்த தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
இது அக்கட்சி கௌரவப் பிரச்சினையாகவே பார்க்கிறது. மேலும் மக்களின் நாடித் துடிப்பை அறியும் தேர்தலாகவும் இது பாவிக்கப்படுகிறது. இந்நிலையில் மதுசூதனனை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல் இன்று ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் நிச்சயம் வெற்றி பெறுவார்.
எனவே வாக்காள பெருமக்களாகிய நீங்கள் ஜெயலலிதாவின் முரட்டு பக்தன், தர்மயுத்த நாயகன் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட போது எடப்பாடி அணிக்கு எதிராக செயல்படும் போதெல்லாம் ஓபிஎஸ் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை தர்மயுத்தம் ஆகும். அந்த அணியில் இருந்தவர்தான் மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது.