என்ன ராஜு சார் இப்பப் போய் இப்படிப் பேசலாமா?
கருணாநிதியின் உடல்நிலை குறித்து கட்சி வேறுபாடின்றி அனைவரும் கவலை கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: கருணாநிதியின் உடல்நிலை நலம் பெற வேண்டி கட்சி மாச்சரியங்களுக்கு அப்பால் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கட்சி வேறுபாடின்றி ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் சென்று அவரது உடல்நலத்தை விசாரித்து வருகின்றனர்.
தெர்மாக்கோல் ராஜூ
கருணாநிதியின் உடல்நிலை குறித்து செல்லூர் ராஜூ கூறுகையில் 2021-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை பார்த்து கருணாநிதி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த பேச்சுதான் சர்ச்சையாகியுள்ளது.
முதுபெரும் மனிதர்
கருணாநிதி முதுபெரும் அரசியல்வாதி என்பதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல், வைகை ஆற்றில் தெர்மாக்கோல் விடுவதை போன்று தேவையற்ற வார்த்தைகளை விட்டுள்ளார் செல்லூர் ராஜூ.
மனிதன் உயிரில் அரசியல்
எத்தனை பெரிய மனிதர்களென்றாலும் நாவடக்கம் தேவை. ஒரு மனிதனின் உயிரில் அரசியல் செய்வது என்பது கூடவே கூடாது. ஜெயலலிதா இறந்த போது தமிழகத்தை ஆள வேண்டாம் என்று தானே சொன்னோம், அவர் வாழ வேண்டாம் என்று சொல்லவில்லையே என்றுதான் திமுகவின் மூத்த நிர்வாகிகளான துரைமுருகன் உள்ளிட்டோர் கூறினர்.
கண்டிக்க வேண்டும்
அதிமுக அமைச்சர்களான உதயகுமார், விஜயபாஸ்கர், அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என்று கூறியதோடு அவர் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்தனர். ஆனால் செல்லூர் ராஜூவோ தனது பதவிக்கு சற்றும் பொருத்தம் இல்லாத வார்த்தைகளை கூறுவது சரிதானா.
இனிமேலாவது கொஞ்சம் பார்த்துப் பேசுங்க செல்லூர் ராஜூ சார்!