என்னை கொஞ்சம் பேச விடுங்க.. சிரிக்காதீங்க.. சட்டசபையில் காமெடி செய்த செல்லூர் ராஜு
இன்று சட்டசபை நிகழ்வில் அமைச்சர் செல்லூர் ராஜு மிகவும் கலகலப்பாக பேசி எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார்.
Recommended Video
சென்னை: இன்று சட்டசபை நிகழ்வில் அமைச்சர் செல்லூர் ராஜு மிகவும் கலகலப்பாக பேசி எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார்.
தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த வாரம் தொடங்கிய சட்டசபை கூட்டம் ஜூலை 9ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் இடையில் சட்டசபை நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறிய திமுக, மீண்டும் சட்டசபையில் கலந்து கொள்ள முடிவெடுத்து, திங்கள் கிழமை சட்டசபை வந்தது.
சட்டசபையில் தொடர்ந்து நீட், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, காவிரி பிரச்சனை என்று வரிசையாக நிறைய விஷயங்கள் குறித்து விவாதித்து வருகிறார்கள். இதனால் சட்டசபை நிகழ்வுகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
அதேசமயம் சட்டசபையில் காமெடியான நிகழ்வுகளும் பல நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு கோபத்தில் காமெடி செய்திருக்கிறார். தெர்மாகோல் மூலம் வைரலாக அவர் தற்போது மீண்டும் வைரலாகி உள்ளார்.
இன்று சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு, பேசுவதற்காக எழுந்த போது, திமுக உறுப்பினர்கள் அவரை பார்த்து சிரிக்க தொடங்கினார்கள். இதனால் அவையில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வரிசையாக சிரிக்க தொடங்கினார்கள்.
அவர் பேச பேச, ஒவ்வொரு வார்த்தைக்கும் திமுக எம்எல்ஏக்கள் சிரித்துள்ளனர். இதனால், செல்லூர் ராஜு பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு அவர்கள் சிரிப்பதை பார்த்துக் கொண்டே நின்றுள்ளார். அதன்பின், ''என்னை கொஞ்சம் பேச விடுங்க, சிரிச்சிக்கிட்டே இருக்காதீங்க?'' என்று கோபமாக பேசுவது போல பேசியுள்ளார்.
ஆனால் அதன்பின்பும் திமுகவினரும் மற்ற கட்சியினரும் சிரித்தனர். ஆனால் இதை சீரியசாக எடுத்துக்கொள்ளாத செல்லூர் ராஜுவும் சிரித்துவிட்டு பின் பேசினார்.