ஆசை தோசை அப்பளம் வடை... செல்லூர் ராஜூவின் உஷார் பேட்டி
சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயத்திற்கு விளக்கம் கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ
Recommended Video
சென்னை: கர்நாடகாவில் இருந்து சாம்பாருக்கு போடும் வெங்காயம் வாங்கப்பட்டு பசுமை பண்ணை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சின்ன வெங்காயம் விலை தாறுமாறு தக்காளி சோறாக மாறியுள்ளதால் இல்லத்தரசிகள் கண்களில் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது.
பசுமை பண்ணை காய்கறி கடைக்குப் போனால், சின்ன வெங்காயம் என்ற பெயரில் பல்லாரியின் மினியேச்சர் சைஸ் விற்பனை செய்யப்படுகிறது. அதை அமைச்சரிடம் புகாராக கொண்டு போனால், ஆய்வு நடத்திய அமைச்சர் சின்ன வெங்காயம், சாம்பார் வெங்காயம், பல்லாரி வெங்காயம், பெரிய வெங்காயத்திற்கு விளக்கம் கொடுத்தார்.
தங்கமான சின்ன வெங்காயம்
தமிழகத்தில் மழை காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் கிலோ ரூ.200 வரை விற்றது.
சின்ன வெங்காயம் விற்பனை
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பண்ணை பசுமை கடைகளில் ரூ.140க்கு சின்ன வெங்காயம் விற்கப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது கூட்டுறவுத் துறையின் சார்பில் 5 ஆயிரம் கிலோ சின்ன வெங்காயம் வாங்கப்பட்டது. அவை டியுசிஎஸ் மற்றும் பூங்காநகர் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.106க்கு விற்கப்பட்டது.
இதை வெங்காயமே நம்பாதே
அவை சின்ன வெங்காயமே அல்ல என்றுகூறி பொதுமக்கள் அதை வாங்குவதை தவிர்த்துவிட்டனர். அவை சிறிய அளவிலான பெரிய வெங்காயம் என்பது பெண்களின் குற்றச்சாட்டு. இதனால், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர்.
கடைகளில் தேக்கம்
மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விரும்பப்படும் இந்த வெங்காயத்தை இங்கு யாரும் வாங்காததால், அவை தேங்கியுள்ளன. பொதுமக்கள் வாங்காததால், தற்போது சில கடைகளில் ரூ.40-க்கு நஷ்டத்துக்கு விற்று வருகின்றனர்.
செல்லூர் ராஜூ
பசுமை பண்ணைக்கடைகளில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, வறட்சி, வெள்ளம் காலங்களில் நிலைமையை சமாளிக்க இதுபோன்று வெங்காயம் வெளியூர்களில் இருந்து வாங்கி விற்பனை செய்கிறோம். இது கர்நாடகாவில் சாம்பாரில் போடும் வெங்காயம்தான்.
பெரிய வெங்காயம்
கர்நாடகாவில் பல்லாரியில் விளையும் வெங்காயம்தான் பெரிய வெங்காயம். அது அளவில் பெரியதாக இருக்கும் என்று கூறினார். வெங்காயத்திற்கு விளக்கம் கொடுக்கும் போது மிகவும் உஷாராகவே பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.