அதிமுக அட்டை இருந்தால்தான் அரசின் நலத்திட்டங்கள் பெற முடியுமாம்... பீதி கிளப்பும் செல்லூர் ராஜூ!
அதிமுக அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Recommended Video
மதுரை: அதிமுக அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உளறி கொட்டி உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அணிகளாக சிதறிக் கிடந்த அதிமுக தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கிவைத்ததற்கு பின்னர் ஒன்றிணைந்தது. இதனால் கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியன ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே கிடைத்தன. இந்நிலையில் பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை வெட்டி விடுவதற்காக அந்த பதவியே இனி அதிமுகவில் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் பதவியே அதிகாரமிக்கது. எனவே இந்த பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.சி. பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்தார். இதனிடையே ஆர்கே நகர் தேர்தல் தோல்வியால் தினகரன் ஆதரவாளர்களாக உள்ள 2000 பேர் நீக்கப்பட்டு விட்டனர்.
29-ஆம் தேதி முதல்
இதனால் தேர்தல் நடத்த ஏதுவாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் உறுப்பினர் சேர்க்கையை கடந்த ஜன. 29-ஆம் தேதி முதல் தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஆங்காங்கே அமைச்சர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
ஆட்சி அதிகாரம்
பொதுச் செயலாளராக யாரை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனரோ அவரிடமே கட்சியும் ஆட்சியும் இருக்கும் என்பதால் இதில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினர் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியிலும் ஒரு கருத்தை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதிமுக பயப்படாது
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், எந்த தேர்தலை கண்டும் அதிமுக பயப்படாது. அதிமுக உறுப்பினர்தான் நமக்கு அத்தாட்சி. அந்த கார்டு என்பது உயிர் போன்றது. இந்த கார்டை அதிமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
அரசாங்க உதவிகள்
இந்த கார்டு இருந்தால் மட்டுமே அரசாங்க உதவிகள் உள்பட எந்த ஒரு உதவியையும் நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ பெற முடியும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். அரசாங்கத்தின் மூலம் உதவி பெற வேண்டுமானால் இந்த கார்டு இருந்தால்தான் முடியும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அதிர்ச்சி
அரசின் நலத்திட்டங்களை பெற அரசு சில விதிகளையும் தகுதிகளையும் வைத்துள்ளது. அந்த தகுதிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக உறுப்பினர் கார்டு இருப்பவர்களுக்கு மட்டும்தான் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.