ஸ்டாலின் இப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.. அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்
ஸ்டாலின் போராட்டம் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம் என்றும் அவர் லண்டன் சென்று வந்த பிறகுதான் ஊடக வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று இப்படியெல்லாம் செய்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையை தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, மழை, வெள்ளம் இயற்கை பேரிடர் காலங்களிலும், லாரி ஸ்டிரைக் போன்ற காலங்களிலும் எளிதில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கும் வகையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது லாரி ஸ்டிரைக் நடைபெற்றுவருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறது. கூடுதல் காய்கள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்துள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ஸ்டாலின் போராட்டம் நடத்தாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அவர் லண்டன் சென்று வந்த பிறகு ஊடகங்களில் வர வேண்டு என்பதற்காகத்தான் ஆளுநரைச் சந்தித்துள்ளார் என்று கூறினார்.
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தமிழக ஆளுநரைச் சந்தித்து, அண்மையில் செய்யாதுரை நிறுவனத்தில் வருமானவரி துறை நடத்திய சோதனை குறித்தும் இது குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.