ரேசனில் பருப்பு வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயபடுத்தலையே - செல்லூர் ராஜூ
ரேசன் கடையில் பருப்பு வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ரேசன் கடையில் பருப்பு வாங்கினால்தான் இலவச அரிசி போடுவோம் என்று நாங்கள் கூறவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ரேசனில் பருப்பு வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பசுமை பண்ணை காய்கறி கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. சின்ன வெங்காயம் என்ற பெயரில் பெரிய வெங்காயத்தை அதுவும் அழுகிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, காய்கறி விற்பனையில் முறைகேடு நடக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டதாக கூறினார்.
பசுமை பண்ணை காய்கறிகள்
விலைவாசிகளை குறைப்பதே பசுமை பண்ணைக்கடைகளின் நோக்கம் என்றும் தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது ரேசன் கடைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை செய்யப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பருப்பு வாங்க கட்டாயபடுத்தவில்லை
அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ரேசன் கடைகளில் பருப்பு வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயபடுத்தவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், பருப்பு வாங்கினால்தான் இலவச அரிசி தருவோம் என்று கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
தரமான பொருட்கள் கிடைக்காதா?
அமைச்சர் சொல்வதைப் பார்த்தால் விலைகுறைவாக விற்பனை செய்யப்படும் பொருள் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறுகிறாரா? அல்லது அப்படித்தான் கொடுப்போம் இஷ்டமிருந்தால் வாங்குங்கள், இல்லாவிட்டால் அதிக விலை கொடுத்து கடையில் வாங்குங்கள் என்று கூற வருகிறாரா தெரியவில்லை.
அரிசியும் அப்படித்தானோ?
ரேசன் கடைகளில் படிப்படியாக பொருட்கள் விற்பனையை குறைத்து வருகின்றனர். இலவச அரிசியின் தரம் சொல்லவே வேண்டாம், கேட்டால் இலவசத்திற்கு அப்படித்தான் தருவோம் வேண்டுமென்றால் வாங்குங்கள் உங்களை கட்டாயப்படுத்தவில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள் போல. அப்போ ஏழைகள் தரமான பொருட்களை சாப்பிடக்கூடாதா?