தமிழகத்தில் தேர்தலில் நிற்கத் தகுதியற்ற முதல் தலைவர் ஜெ. அல்ல.. செல்வகணபதிதான் 'பர்ஸ்ட்'
சென்னை: தமிழகத்தில் ஊழல் வழக்கில் சிக்கி சிறைத் தண்டனைக்குள்ளாகி தேர்தலில் நிற்க தகுதியற்றவர் என்ற பெருமையைப் பெற்ற முதல் தலைவர் ஜெயலலிதா அல்ல. மாறாக ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய பதவி வகித்து பின்னர் திமுகவுக்குத் தாவி அதில் செயல்பட்டு வந்த செல்வகணபதிதான் அந்த வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் தலைவர் ஆவார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் தலைவரும் செல்வகணபதிதான்.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள், அதன் பின் 3 மாதங்கள் வரை மேல் முறையீடு செய்யவும், தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு பெறவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக இருந்தனர்
முன்பு இந்த கால கட்டத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4)-ன்படி அவர்கள் பதவியிலிருந்து தகுதி நீக்கம் பெறாமல் பாதுகாப்பு பெற்று வந்தனர்.
உச்சநீதிமன்றத்தால் வந்தது வினை
ஆனால் இந்த சட்டப் பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது என கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி அறிவித்த உச்ச நீதிமன்றம், தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தியாவிலேயே முதல் தலைவர் காங்கிரஸின் ரஷீத் மசூத்
இந்தத் தீர்ப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் என்பவர்தான் இந்தியாவிலேயே முதல் நபராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 1990, 91-ம் ஆண்டுகளில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2வது நபர் லாலு பிரசாத் யாதவ்
அடுத்து, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த ஜகதீஷ் சர்மா ஆகிய இருவரும் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். லாலுதான் தேசிய அளவில் பிரபலமான முதல் அரசியல் தலைவர் ஆவார்.
சிக்கிய செல்வகணபதி
அதன் பின்னர் தமிழகத்தில் செல்வகணபதி இந்த சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி இவர்தான்.
சுடுகாட்டு கூரை ஊழல்
முதலாவது அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டி.எம்.செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எம்.பி பதவி பறிப்பு
இதையடுத்து செல்வகணபதியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அவர் 6 ஆண்டுகள் மற்றும் தண்டனைக் காலமான 2 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
உமாசங்கர்
அதிமுக ஆட்சிக் காலத்தில் டி.எம்.செல்வகணபதி அமைச்சராக இருந்தபோது சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் வெளியில் வர அப்போதைய ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர்தான் முக்கியக் காரணமாவார்.
திமுகவில் சேர்ந்தும் புண்ணியமில்லை
இந்த வழக்கிலிருந்து தப்புவதற்காக திமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியில் சேர்ந்து பார்த்தால் செல்வகணபதி. மேலும், 2010ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் எல்லாம் கை மீறிப் போய் பதவியும் பறி போனது, தடையும் வந்து சேர்ந்தது.