சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா: விடைபெற்றார் ஆளுநர் வித்யாசாகர்!
தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடைபெற்றார். மும்பை புறப்பட்ட அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வந்தார்.
ஓராண்டுக்குப் பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக மேகாலயா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை குடியரசுத் தலைவர் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பை புறப்பட்டார்.
அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வரவுள்ளார். தமிழக ஆளுநராக அவர் நாளை பதவி ஏற்கவுள்ளார்.