அச்சன்கோவிலில் இன்று மஹோற்சவ விழா - குவியும் அய்யப்ப பக்தர்கள்
தென்காசி: செங்கோட்டை அருகே உள்ள அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் 11 நாள் நடைபெறும் மஹோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
செங்கோட்டை மேக்கரை அருகே கேரள எல்லையில் அச்சன்கோவிலில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மஹோற்சவ விழா மிக சிறப்பாக நடப்பது வழக்கம்.
கொடியேற்றத்துடன் துவக்கம்:
இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடி மரத்தில் தந்திரி கொடியேற்றி சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்.
பல கோடி ரூபாய் ஆபரணங்கள்:
திருவிழாவிற்காக புனலூர் கருவூலத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள திரு ஆபரணங்கள் எடுத்து வரப்பட்டன.
தீபாராதனை விழா:
இவை இன்று சுவாமிக்கு சாத்தப்பட்டு தீபாராதனை நடக்கிறது. விழாவில் தினமும் அன்னதானம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இம்மாதம் 25 ஆம் தேதி நடக்கிறது.
தங்க வாள் உற்சவம்:
தேர் வெளிப்பிரகாரத்தை சுற்றி வலம் வரும்போது தேருக்கு முன்பு ஐயப்பனின் தங்க வாளை கோயில் நிர்வாக அதிகாரி ஊர்வலமாக எடுத்து வருவார். தொடர்ந்து தேருக்கு முன்பு பிரகாரத்தில் வைத்து கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது.
கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி:
இதில் கேரளம் மட்டுமின்றி தமிழகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவில், வரும் 26 ஆம் தேதி ஆராட்டு விழா, 27 ஆம் தேதி மஹோற்சவ திருவிழா நிறைவு விழா நடக்கிறது.