செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகள் நவம்பரில் முடியும்.. மதுரை கோட்ட மேலாளர் அறிவிப்பு
செங்கோட்டை புனலூர் இடையிலான அகல ரயில் பாதைப் பணிகள் வரும் நவம்பரில் முடிவடையும் என மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை: மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டை புனலூர் அகல ரயில் பாதைப் பணிகள் வரும் நவம்பரில் முடிவடையும் என்று கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா நெல்லை, தென்காசி, செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள சுகாதாரம், பாதுகாப்பு, நடைமேடை, பிளாட்பார வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது: செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதையில் கட்டுமான பிரிவு பணிகள் நடந்து வருகின்றன. 85சதவிகித பணிகள் நிறைவு நிறைவு பெற்றுவிட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும்.
அதன்பின் ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆய்வு நடைபெறும். அவர்களின் அனுமதிக்குப்பின் ரயில் இயக்கம் தொடங்கும்.மேலும் மதுரைக் கோட்டத்தில் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரயில் நிலையங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் நிர்பயான் திட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மதுரை கோட்டத்திலுள்ள பெரிய ரயில் நிலையங்களில் நிர்பயா திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்டு ரயில் நிலையங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என நீனு இட்டியாரா கூறினார்.