அதிமுகவிற்காக துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் பி.எச். பாண்டியன்.. ஆவேச செங்கோட்டையன்
அதிமுகவிற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் பி.எச். பாண்டியன் என்று செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.
சென்னை: அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் பி. எச். பாண்டியன் என்றும் அவர் அதிமுகவிற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இன்று காலை பி.ஹெச். பாண்டியன், சசிகலா தலைமை குறித்தும், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து குற்றம் சாட்டி செய்தியாளர் சந்திப்பில் விளக்கிப் பேசினார். இதனையடுத்து, அதிமுகவின் மூத்த தலைவரான பண்ரூட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய இரண்டு பேரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செங்கோட்டையன் கூறியதாவது;
"சின்னம்மா" மீது அவ்வளவு குற்றச்சாட்டுக்களை வைக்கும் பி. எச். பாண்டியன் எம்ஜிஆர் இறந்த போது குழப்பத்தை ஏற்படுத்தியர். அப்போதே எங்களை எல்லாம் வெளியே அனுப்ப பெரிய திட்டங்களை அவர் தீட்டியிருந்தார். ஜெயலலிதா மீது வழக்குத் தொடர காரணமாக இருந்தவரே பாண்டியன்தான்.
மேலும், அதிமுகவிற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் பி. எச். பாண்டியன். கட்சிக்காக உழைப்பவர்கள் உண்மையான தொண்டர்கள் என்று செங்கோட்டையன் கூறினார்.
முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நெருக்கடியை சந்தித்து வருவது உண்மைதான் என்றும் தேவையில்லாமல் வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் என்றும் பண்ரூட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.