தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது குறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிக் கூடங்கள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
இதையடுத்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை 10 நாள்களுக்கு தமிழக அரசு ஒத்தி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து முன்னாள் ஹகோர்ட் நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கடந்த ஒரு மாதங்களாக தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆய்வின் போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பள்ளிக்கூடங்களில் யோகா, விளையாட்டு, சாலை விதிகள், தேசப்பற்று ஆகியவை குறித்து மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பது குறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.