பச்சைப் புல்லும் பற்றி எரியும் கதிராமங்கலம்- பயங்கரவாத அரசுகள்- கேஎஸ்.ராதாகிருஷ்ணன் #kathiramangalam
காவிரிப் படுகையில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான குரல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை : கதிராமங்கலத்தில் அடாவடித் தனத்தை அரங்கேற்றி மத்திய, மாநில பாசிச அரசுகள் பயங்கரவாதத்தை திணிப்பதாக மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இதனிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வயல் வெளியில் ஓஎன்ஜிசி பதித்த குழாயில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
வன்முறை, தடியடி என்று போராட்டக் களமாக மாறியுள்ளது கதிராமங்கலம். இதனால் கதிராமங்கலம் போராட்ட களத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களும் மிக வேகமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி செய்து வருகின்றன.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம் காவிரிப் படுகையில் பயங்கரவாதத்தை அரங்கேற்றுவதாக மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு இதோ:
கதிராமங்கலம்......
மண்ணைத் துளைக்காத,
மக்களை எரிக்காதே..
-தம்பி மு.ரா விவேக் வரிகள்
சீர்காழி லேர்ந்து
வைத்தீஸ்வரன்கோவில்
மாயவரம்
குத்தாலம்
குடவாசல்
ஆடுதுறை
கும்பகோணம்
அப்படியே அந்த பக்கம்
மாயவரத்துலேந்து
திருவாரூர்
நன்நிலம்
கொல்லுமாங்குடி
மன்னார்குடி
ரைட் ல போனா....
சேத்தூர்
கடலங்குடி
மணல்மேடு
புத்தாகரம் ...அப்படியே போய் கும்பகோணோம் சேரும்
எவளோ சின்ன சின்ன சின்ன கிராமங்கள்.....
இந்த பகுதிக்கெல்லாம் தை மாதங்களில் அதிகாலை பொழுதுகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது .....
நெற்கதிர் சாய்ந்து அந்த பாலின் வாசமும்-நெற்கதிரின் வாசமும் -ரோடு ஓரத்தில் புல்லில் இரவு பெய்த பனியின் வாசமும் .....கலந்து இனம்புரியாத உலகத்துக்கு செல்வோம்.......
இப்ப பச்சை புல்லும்-செடியும் தீ புடிச்சு எரியுது......
பதற்றம் , மரண பீதி , மயான அமைதி , காவல்துறை அராஜகம் , கழுத்தறுப்புவேலைகள் ,ஆள்காட்டி வேலைகள் , அடாவடி , அடிதடி , அடக்குமுறை - இப்படி பல்வேறு வடிவங்களில் அரச பயங்கரவாதத்தை ஒட்டு மொத்தமாய் அரங்கேற்றி அதை பரிசோதனை செய்து வெற்றிகண்டிருக்கிறது பாசிச மத்திய மாநில அரசுகள்.