ஜெ.விற்காக நீதிபதியையே கூண்டில் நிற்க சொன்னவர்.. 90 வயதில் கர்ஜித்த ராம் ஜெத்மலானி.. மறக்க முடியுமா!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம்.
Recommended Video
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம்.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95. அவரின் மரணம் அரசியல் தலைவர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி பிரபலம் அடைந்தவர். தவறான திசையில் சென்று கொண்டு இருக்கும் வழக்குகளை இவர் தனது வாதம் மூலம் புரட்டிப்போட்டு இருக்கிறார்.
அவர் வந்து நின்றால் அறையே கிடுகிடுக்கும்.. கிரிமினல் வழக்கின் கிங்.. விடைபெற்றார் ராம் ஜெத்மலானி!
எப்படி
ராம் ஜெத்மலானி அப்படி ஆஜர் ஆன முக்கியமான வழக்குதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி மைக்கேல் டி குன்கா இந்த வழக்கில் மிகவும் கடுமையாக, நேர்மையாக செயல்பட்டு, ஜெயலலிதா தரப்பை கேள்விகளால் துளைத்தார்.
ஜெயலலிதா வழக்கு
இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது எல்லோரும் வைத்த குற்றச்சாட்டு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் சரியாக வாதம் செய்யவில்லை என்பதுதான். ஒரு காலத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் எல்லாம் மிக சிறப்பாக வாதம் செய்வார்கள். ஆனால் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் அப்படி வாதம் செய்யவில்லை என்று புகார் எழுந்தது.
யார் வேண்டும்
இதை தெரிந்து கொண்ட ஜெயலலிதா உடனடியாக தனக்கு மாற்று வழக்கறிஞர் வேண்டும் என்றார். இதற்காக அவர் அழைத்து வந்த வழக்கறிஞர்தான் 90 வயது நிரம்பிய ராம் ஜெத்மலானி. அவர் வந்த பின் கர்நாடக ஹைகோர்ட்டில் இந்த வழக்கின் போக்கே மாறியது என்று கூட கூறலாம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இவர் ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம்.
தொடக்கம்
ஜெயலலிதாவை ஆரம்ப காலத்தில் இவர் தீவிரமாக எதிர்த்து வந்தவர். ஆனால் கடைசியில் அவருக்காகவே ஆஜர் ஆகி கர்நாடகாவில் வாதம் செய்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு முதலில் இவரால் பெயில் வாங்கி தர முடியவில்லை. அரசு தரப்பு எதிர்க்கவில்லை என்றாலும் கூட இவரால் பெயில் வாங்கித் தர முடியவில்லை.
குமாரசாமி
அதன்பின் நீதிபதி குமாரசாமி அமர்வு ஜெயலலிதாவை விடுதலை செய்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதம்தான் மிக முக்கியமான திருப்பு முனையாக பார்க்கப்பட்டது. வழக்கின் போக்கையே ராம் ஜெத்மலானி மாற்றினார். அவரின் வாதம் அன்று பலருக்கும் பாடமாக இருந்தது என்று பல இளம் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லண்டன்
இந்த வழக்கில் வாதம் செய்வதற்காக லண்டனில் இருந்து ராம் ஜெத்மலானி அழைத்து வரப்பட்டார். ராம் ஜெத்மலானி முதலில் செய்த வாதமே பலருக்கும் அதிர்ச்சி அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். கர்நாடக ஹைகோர்ட்டில் எழுந்த நின்ற அவர், ''நீதிபதி குன்ஹா எங்கே? அவரையும் நீதிமன்ற கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும், அவர் நீதிபதி போல செயல்படவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞர் போல செயல்பட்டுள்ளார்'' என்று குறிப்பிட்டார்.
முக்கியம்
ஜெயலலிதாவிற்காக நீதிபதியையே கூண்டில் ஏற்ற வேண்டும் என்று அவர் கூறியது பெரிய வைரலானது. அதன்பின் ஜெயலலிதா மரணத்தின் போது ராம் ஜெத்மலானி மிகவும் வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரிய நட்பு
இவரின் மரணம் அதிமுகவினர் இடையில் மட்டுமில்லாமல் பலவேறு கட்சித் தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல அரசியல் தலைவர்களுடன் இவர் மிக நெருக்கமான நட்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.