செயல் தலைவர் 'ஸ்டாலின்'... தகுதிகள் நிறைய இருக்கும்போது தம்பட்டம் எதற்காம்?
ஸ்டாலின் உருக்கமாக பேசியது தொண்டர்களை ஈர்த்திருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு மாறாக திறந்தவெளி பொதுக்குழுவை நடத்திவிட்டு ஸ்டாலின் உருக்கமாக பேசியது சீனியர்களுக்கு அதிருப்தியாம்.
சென்னை: திமுகவின் செயல் தலைவராக முக ஸ்டாலினை திமுக பொதுக்குழு நியமித்திருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இருப்பினும் திறந்த வெளி பொதுக்குழுவாக நடத்தி கொண்டாடிவிட்டு 'மகிழ்ச்சியோடு' பதவியேற்கவில்லை என ஸ்டாலின் பேசியிருப்பது நெருடலாகத்தான் உள்ளது.
திமுகவின் பொதுக்குழு கூடும் போது முதலில் போட்டோகிராபர்கள்/ வீடியோ கிராபர்கள் உள்ளே படமெடுக்க அனுமதிக்கப்படுவர். பின்னர் திமுக தலைவர் கருணாநிதி வந்த உடன் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கதவுகள் மூடப்படும்.
பொதுக்குழுவில் பேசப்படுகிற விஷயங்கள் பகிரங்கமானதாக இருக்காது. பொதுக்குழு முடிவில் தீர்மானங்கள்தான் பகிரங்கப்படுத்தப்படும். அப்புறம்தான் அரசல் புரசலாக யூகங்களாக பொதுக்குழுவில் அப்படி பேசினார்கள்... இப்படி பேசினார்கள் என்று செய்திகள் கசியும்.
இந்த வழக்கத்துக்கு மாறாக திமுகவின் பொதுக்குழு இன்று திறந்தவெளி பொதுக்குழுவாக நடத்தப்பட்டது. அதுவும் பொதுக்குழுவில் தொண்டர்கள் பேசுவதை கேட்பதற்காக ஒலிபெருக்கிகள் கூட வைக்கப்பட்டிருந்தன. பொதுக்குழு உறுப்பினர்களைத் தவிர தொண்டர்களும் கூட இன்று அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதாவது ஸ்டாலின் செயல் தலைவராவதை கொண்டாடுவதற்குதான் இத்தனை வழக்கத்துக்கு மாறான ஏற்பாடுகள். இத்தனையையும் செய்துவிட்டு ஏற்புரையாற்றிய ஸ்டாலின், நான் மகிழ்ச்சியோடு இந்த பொறுப்பை ஏற்கவில்லை என உருக்கமாக பேசியது செயற்கைத்தனமான ஒன்றாகத்தான் இருந்தது.
செயல் தலைவராகும் தகுதிகள் உங்களுக்கு இருக்கிறது... வழக்கம் போல பொதுக்குழுவை கூட்டி அதன் முடிவிலே இந்த அறிவிப்பை வெளியிடுவதைவிட்டு இத்தனை தம்பட்டம் எதற்காம்? என்பதுதான் சீனியர் திமுகவினரின் கேள்வி.