எழுத்தாளனுக்கு இல்லை எண்ட் கார்டு!... ஞாநிக்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் இரங்கல் செய்தி!
எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான ஞாநியினி மறைவுக்கு அவருடைய நண்பர்களும், மூத்த பத்திரிக்கையாளர்களும் இரங்கல் தெரிவித்து கருத்துகளை முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
சென்னை : எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான ஞாநியின் மறைவிற்கு அவருடைய நண்பர்களும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும், சக மூத்த பத்திரிக்கையாளர்களும் கண்ணீர் அஞ்சலி தெரிவித்து முகநூலில் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளரும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பேச்சாளராகவும் விளங்கிய ஞாநி இன்று அதிகாலையில் உயிரிழந்தார். கடைசியாக துக்ளக் ஆண்டுவிழா பற்றி முகநூலில் பதிவிட்ட அவர், திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட உயிரிழந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஞாநியின் மறைவுக்கு அவருடைய சக நண்பர்கள், அவருடன் பணியாற்றியவர்கள், அவருடன் சமூக ஊடகங்களில் தொடர்பில் இருப்பவர்கள் என அனைவரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலரின் முகநூல் பதிவுகளை இங்கே பார்க்கலாம்.
திருப்பூர் கிருஷ்ணனின் நினைவலைகள்
பத்திரிக்கையாளர் ஞாநியின் நண்பரும், மூத்த பத்திரிக்கையாளருமான திருப்பூர் கிருஷ்ணன் ஞாநி மறைவையொட்டி எழுதியுள்ள கண்ர் அஞ்சலியில்:
பரீட்ஷா ஞாநி காலமான செய்தி மிகுந்த வருத்தம் தந்தது. நோயோடு போராடிக் கொண்டிருந்தார். இறுதியில் நோய் அவரை வென்றது. கொள்கை ரீதியாக அவருக்கும் எனக்கும் பல வேறுபாடுகள். அவர் ஆன்மிக நம்பிக்கைகள் அற்றவர். நான் காந்தியவாதி. ஆனால் மிக இனிய நண்பராக இருந்தார். தினமணியில் 25 ஆண்டுகாலம் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது தான் அவர் என் நண்பரானார்.
பரீட்ஷா நாடகங்களைத் தொடர்ந்து நான் பார்த்து ரசித்து வந்திருக்கிறேன். பல நாடகங்களுக்கு விமர்சனமும் எழுதியிருக்கிறேன். அறந்தை நாராயணன் எழுதிய நடிகை சாவித்திரியின் கதையை `விண்ணிலிருந்து மண்ணுக்கு` என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக எடுத்தபோதுதான் பரவலான தளத்தில் அவர் அறியப்பட்டார்.
ஞாநி மிக நல்ல மேடைப் பேச்சாளரும் கூட. அசோகமித்திரன் காலமானபோது அவர் நிகழ்த்திய ஒரு மணிநேரத்திற்கும் மேற்பட்ட நினைவஞ்சலி உரை மறக்க இயலாதது. ஞாநியைப் பற்றி நினைக்கிறபோது நானும் அவருமாக உரையாடி மகிழ்ந்த எத்தனையோ சந்தர்ப்பங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. ஒரு துளியும் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த நாடகக் கலைஞன் ஒருவரை, ஓர் உயர்ந்த பண்பாளரைத் தமிழுலகம் இழந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.
ஞாநியுடனான கதிர்வேலின் உரையாடல்
இதே போன்று மூத்த பத்திரிக்கையாளர் கதிர் வேல் தனது முகநூல் பக்கத்தில் ஞாநியுடனான ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தி முகநூலில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ஞாநி பத்திரிக்கைக்காக ஒரு கட்டுரை எழுதி கொடுத்தார். ஹாட் டாபிக்தான். ஆனால் ஃபார்ம் முடிந்து விட்டது. அச்சுக்கு அனுப்ப வேண்டிய நேரம். அவர் கருத்து வழக்கம் போல் ஆழமாக இருந்தது. அடுத்த இதழுக்கென ஹோல்ட் செய்தால் 4 நாள் ஆகிவிடும். ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
ஓவியத்துடன் 3 பக்கம் வரக்கூடிய கட்டுரையை ஓவியம் இல்லாமல் ஒரே பக்கத்தில் அடங்குமாறு எடிட் செய்தேன். வேறொரு 3 பக்க செய்தியை 2 பக்கமாக்கி, மிச்சப்படுத்திய பக்கத்தில் இவர் கட்டுரையை சேர்த்தேன். ஃபார்ம் புதிதாக ரெடியானது. தகவல் தெரிந்து வந்தாரா, தற்செயலா என்று தெரியாது. மேஜையில் இருந்த ஃபார்மை அனுமதி கேட்டு எடுத்து படித்தார். அவருக்கே உரிய கணீர் குரலில் ஆரம்பித்தார். பாதிக்கும் குறைவாக சுருக்கி விட்டீர்களே. எடிட் செய்திருக்கிறேன். என் எழுத்தை அப்படி செய்வது வழக்கம் இல்லை. எடிட் பண்ணாமல் பிரசுரிப்பது என் வழக்கம் இல்லை. என்றைக்கோ நான் இருந்த நாற்காலியில்தான் அமர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கு நன்றி.
அடுத்த இதழில் வந்தால் போதும். சுருக்காமல் போடுங்கள். சூடாக கொடுத்தால்தான் வாசகர்களுக்கு பிடிக்கும். அப்படியானால் தகுதி குறைந்த செய்தியை எடுத்துவிட்டு இதை அப்படியே போடுங்கள். மன்னிக்க வேண்டும். நேரம் முடிந்து விட்டது. ஆசிரியர் சொன்னாலாவது கேட்பீர்களா.
அதை எப்படி மீற முடியும்.
இதை கேட்டபின் நம்பிக்கையுடன் ஆசிரியர் அறைக்கு சென்றவர், கால் மணி நேரத்தில் திரும்பி வந்தார். பொறுப்பாசிரியர் முடிவில் தலையிட மாட்டேன் என்று ஆசிரியர் சொல்லி விட்டார். நீங்களே மறு பரிசீலனை செய்யுங்கள். சான்ஸ் இல்லை, சார். சாரி. உங்கள் எடிட்டிங்கை குறை சொல்ல வழியில்லை. ஆனால் வாசிப்பவர்கள் இது நான் எழுதியது என நம்ப மாட்டார்கள். Substance முக்கியமா, Style முக்கியமா.
இரண்டுமே முக்கியம். ஏன் என்றால் நான் established writer. எனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. என்ன செய்யலாம், சொல்லுங்கள்.
கட்டுரையை திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதிப்பீர்களா. நிச்சயமாக. வருத்தமுடன். ஒரு எழுத்தாளர் அல்லது ஊடகர் அதன் பிறகு என் சந்திப்பை தவிர்த்திருப்பார். நானே அப்படித்தான் நடந்திருப்பேன். அவருக்கு அந்த ஈகோ கிடையாது. எதுவுமே நடக்காத மாதிரி மறுநாள் வந்து வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
சில விஷயங்களில் முற்றிலும் மாறுபட்ட நிலையிலும் அவரது நடத்தை துளியும் அதை பிரதிபலிக்கவில்லை. இரண்டு முறை இக்கட்டான சூழலை நான் எதிர்கொண்ட நேரத்தில், எந்த வகையில் வேண்டுமானாலும் உதவ தயாராக இருப்பதாக அவராகவே முன்வந்தார்.அவரால் முடியும். மீடியாவில் இன்று வெற்றிகரமாக செயல்படும் சில நூறு பேருக்கு சில காலமேனும் நிழல் தந்து அரவணைத்திருந்தது அவரது வீடு. அல்லது மனது.
ஒவ்வொரு மனிதரிடமும் உள்ள ஒரு நல்ல குணத்தையாவது சுவீகரிக்க ஆசை உண்டு. யாருடன் எவ்வளவு ஆழமான கருத்து மோதல் இருந்தாலும் அவர் மீது நம் மனதில் அணுவளவும் கசப்பு படிய விடாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று இவரிடம் கற்றுக் கொள்ள விரும்பினேன். குட்பை நண்பரே. திட்டுவதற்கு ஆளில்லாத இடத்தில் உங்களுக்கு கொஞ்சம் போரடிக்கும் என்று பகிர்ந்துள்ளார் கதிர்.
சமூகத்தின் மீது தீராக் காதல் கொண்டவர்
விவாத நிகழ்ச்சிகளில் நெறியாளர், பேச்சாளர் என்ற உறவைத் தாண்டி 20 ஆண்டுகள் நட்பு பாராட்டிய நண்பரை இழந்தவிட்டதாக மூத்த செய்தியாளர் குணசேகரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னோடி இதழாளர், அச்சமற்ற சிந்தனையாளர், மானுடத்தின் மீதும் நீதியான சமூகத்தின் மீதும் தீரா காதல் கொண்டவர். இளம் பத்திரிகையாளர்களுடன் உரையாடலை நேசித்தவர், கூர்ந்த மதியாளர், தர்க்கங்களின் நாயகன் - 20 ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு பாராட்டிய நண்பர் ஞாநிக்கு கண்ணீர் அஞ்சலி! என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளருக்கு எண்ட் கார்டு கிடையாது
மூத்த பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூலில் எழுதியுள்ள முகநூல் பதிவில் : எழுத்தாளர். பத்திரிகையாளர், விமர்சகர் ஞானி காலமாகிவிட்டார்.. நேரடி பரிச்சியமில்லை என்றாலும் இங்கே நம் முகநூல் பக்கத்திற்கு வந்து முக்கிய தருணங்களில் தகவல்கள் சொல்லிவிட்டு போவார்.. அவர் பக்கத்திலும் போய் அடிக்கடி கம்பு சுத்திவிட்டு வருவோம்.. நாம் போராடுவதற்கென்றே, கருத்து வேறுபாடுகளால் எதிர் தரப்பு படைவரிசையில் அணிவகுத்தவர்.. எழுத்தாளனுக்கு ஏது எண்ட் கார்டு? என்று பதிவிட்டுள்ளார் இவர்.