நீதிபதி கர்ணன் பொறுப்பின்றி செயல்பட்டதால்தான் 6 மாத சிறை தண்டனை- வழக்கறிஞர்கள் சாடல்
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பொறுப்பின்றி செயல்பட்டதால்தான் உச்சநீதிமன்றம் அவருக்குச் சிறைத் தண்டனை அளித்துள்ளது என்று மூத்த வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சென்னை: உச்சநீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து ஒட்டுமொத்த நீதிமன்றங்களின் கவனமும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது திரும்பியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு காரணமே அவரின் செயல்பாடுகள்தான்.நீதிபதிகள் பற்றியும் நீதித்துறை குறித்தும் நீதிபதி கர்ணன் பொறுப்பின்றி தெரிவித்த கருத்துக்கள்,செயல்பாடுகள்தான் சுப்ரீம் கோர்ட்டை இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கவைத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, காலதாமதமாக உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தாலும்,அது வரவேற்கவேண்டிய விஷயமே.அந்த அளவுக்கு நீதிபதி கர்ணனின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன் கூறுகையில், உச்சநீதி மன்றம்,நீதிபதி கர்ணனுக்கு எதிராக எடுத்துள்ள இந்த நடவடிக்கை சரியானதுதான்.அவரின் நடவடிக்கையே உச்ச நீதிமன்றத்தை,சிறைத் தண்டனை வழங்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. கர்ணனின் பொறுப்பற்ற நடவடிக்கைகளை எவ்வளவு நாள்தான் உச்ச நீதிமன்றம் பொறுத்துக்கொள்ள முடியும்.அதனால்தான் வேறு வழியின்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கர்ணனுக்கு சிறைத் தண்டனையை வழங்கியுள்ளனர் என்றார்.