டிஜிபி டி.கே. ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பால் மூத்த அதிகாரிகள் கடும் ஏமாற்றம்- அதிருப்தி!
டிஜிபி டி.கே. ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதில் மூத்த போலீஸ் அதிகாரிகள் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகாலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதில் பல மூத்த போலீஸ் அதிகாரிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டம் ஒழுங்கு (கூடுதல் பொறுப்பு) டிஜிபியாக இருந்த டி.கே. ராஜேந்திரன் பதவிக் காலம் 2 ஆண்டுகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் 5-வது இடத்தில் இருந்த டி.கே. ராஜேந்திரனுக்கு ஓவர்லுக் செய்துதான் ஜெயலலிதா சட்டம் ஒழுங்கு(கூடுதல் பொறுப்பு) டிஜிபி என நியமித்தார்.
டெல்லி லாபி
இவரது பதவிக் காலம் முடிவடைகின்ற போது டெல்லி லாபிகள் மூலமாக பதவி நீட்டிப்புக்கு படுதீவிரமாக முயற்சித்தார். இருப்பினும் மத்திய அரசு அவ்வளவு எளிதாக பதவி நீட்டிப்பு வழங்காது என்றே கூறப்பட்டு வந்தது.
எதிர்பார்ப்புடன் சீனியர்கள்
இதனால் சீனியர் டிஜிபியான ராதாகிருஷ்ணன் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அதேபோல் டிஜிபி ஜார்ஜூம் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தார். இந்த இருவரும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுவதை ஜாங்கிட் உள்ளிட்ட ஏடிஜிபிகளும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஏடிஜிபிக்கள் எதிர்பார்ப்பு
ஏனெனில் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜார்ஜ் இருவரது பதவிக் காலமும் சில மாதங்களே உள்ளன. இதனால் ஏடிஜிபியாக இருக்கும் தங்களுக்கு டிஜிபி அந்தஸ்து விரைவில் கிடைத்துவிடும் என்கிற பெருநம்பிக்கைதான். மேலும் குட்ஹா லஞ்சம் விவகாரத்திலும் டி.கே. ராஜேந்திரன் பெயர் அடிபட்டதால் எப்படியும் பணிநீட்டிப்பு கிடைத்துவிடாதே என எதிர்பார்த்தனர்.
பதவி நீட்டிப்பால் அதிருப்தி
ஆனால் எல்லாமே தவிடுபொடியாகி தற்போது டி.கே. ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகாலம் பதவி நீட்டிப்பு கிடைத்துவிட்டது. இதனால் பெரும் ஏமாற்றமடைந்த போலீஸ் அதிகாரிகள் கடும் அதிருப்தியுடன் இருக்கின்றனர் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.