கொடநாட்டில் ஓபிஎஸ், நத்தம் சொத்து ஆவணங்கள்? கொள்ளையடிக்க முயன்றது மூத்த அமைச்சர்? சசி சந்தேகம்
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் மூத்த அமைச்சர் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என சசிகலா தரப்பு சந்தேகிக்கிறது.
சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் இருந்ததாகவும் இதை எடப்பாடி கோஷ்டியைச் சேர்ந்த மூத்த அமைச்சர்தான் எடுக்க முயற்சித்திருக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவின் மரணத்தைப் போட கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை, கொள்ளை சம்பவமும் மர்மமாகவே நீடிக்கிறது. இந்த வழக்கை எப்படியும் ஒன்றுமில்லாமல் முடித்துவிட வேண்டும் என்பதில் போலீஸ் அதிதீவிரம் காட்டுவதே பல சந்தேகங்களை எழுப்புகிறது.
ஜெ. கடிகாரங்கள்...
ஜெயலலிதாவின் விலை உயர்ந்த கைகடிகாரங்களை திருடினார்கள் என்று போலீஸ் கூறியது. இதற்கு ஆதாரமாக அவரது படம் போட்டிருந்த, அதிமுக அதிதீவிர தொண்டர்கள் கட்டும் கடிகாரங்களை காட்டி எங்கப்பன் குதிருக்கு இல்லை என சொன்னது போலீஸ்.
கனகராஜ் மர்ம மரணம்
பின்னர் ரூ200 கோடி பணத்தை கொள்ளையடிக்க வந்தனர் என புதியதாக ஒரு கதையை கட்டியது. ஆனால் கொடநாடு கொலை, கொள்ளையின் முக்கிய குற்றவாளியான கனகராஜின் மர்ம மரணம் குறித்து வாய்பேச மறுக்கிறது போலீஸ்.
ஓபிஎஸ், நத்தம் ஆவணங்கள்
இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து சசிகலா கோஷ்டி பறித்த சொத்து ஆவணங்கள்தான் கொடநாடு பங்களாவில் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவணங்களை எடப்பாடி கோஷ்டியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சித்ததாக சசிகலா தரப்பு சந்தேகிக்கிறது.
மூத்த அமைச்சருக்கு தொடர்பு?
இது தொடர்பாக மூத்த அமைச்சர் ஒருவரிடமும் சசிகலா தரப்பு விசாரித்திருக்கிறது. ஆனால் தாமே முதல்வர் என கெத்தாக வலம் வரும் அந்த 'மணி' அமைச்சர் சசிகலா தரப்புக்கு தெனாவெட்டாக பதில் சொல்லி இருக்கிறது. இதனால் சசிகலா கோஷ்டி கடும் கோபத்தில் இருக்கிறதாம்.