7 தமிழர் உயிரை காத்த அன்னை.. இது செங்கொடி பற்ற வைத்த நெருப்பு!
செங்கொடி அன்று செய்த தியாகத்திற்கு இன்று அர்த்தம் தெரிந்துள்ளது.
சென்னை: அன்று செங்கொடி பற்ற வைத்த நெருப்பு இன்று 7 தமிழர்கள் விடுதலை வரை கனன்று வந்துள்ளது.
"உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள், நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.... உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்."
இலங்கை தமிழர்களுக்காக முத்துக்குமார் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிவைத்த கடிதம் இது ... முத்துக்குமாரின் இந்த மரணசாசனத்தில்தான் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த வரிகள். முத்துக்குமாரைதான் செங்கொடி தன் மரணம் வரை உயர்த்தி பிடித்தாள்.
நெருப்பினால் எழுதினாள்
செங்கொடி!! மரண தண்டனைக்கு எதிராக தீக்குளித்து உயிர்விட்ட முதல் பெண். கடந்த 2011 ஆம் ஆண்டு மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை உறுதி என்ற நிலை உருவானது. இதனால் தமிழகமே பதட்டமடைந்தது. அரசியல் கட்சிகளோ தீர்ப்பை கண்டு திணறின. இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழர்கள் பல வடிவ போராட்டங்களை மேற்கொண்டனர், ஆனால் எல்லாமே விழலுக்கு இழைத்த நீரானது... கடைசியாக போராட்டக் களத்தில் இருந்த செங்கொடி தூக்கு தண்டனையை எப்படியாவது தடுத்து அவர்களை விடுவித்து விடுங்கள் என்று தன் உடலுக்கு தீ மூட்டிக்கொண்டு நெருப்பினால் தன் வாசகத்தை எழுதிவிட்டு போனாள்.
தோழர் செங்கொடி
உயிருடன் இருந்து போராடுவதை விட்டு விட்டு இப்படி உயிரை மாய்த்து வேண்டுகோள் விடுக்க வேண்டுமா என பல தரப்பட்ட தலைவர்கள், பல்வேறு தரப்பட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என எல்லோருமே துடித்து போய்விட்டார்கள்! "தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.- இப்படிக்கு தோழர் செங்கொடி" என்று எழுதப்பட்ட வரிகளுக்கு இன்று உயிர் கிடைத்துவிட்டது.
7 பேர் உயிர் காத்தாள்
ஆம்... செங்கொடியின் உயிர் 3 தமிழர்களை மட்டும் அல்ல... 7 தமிழர்களையும் சேர்த்தே காப்பாற்றி விட்டது. இவர்களுக்கும் செங்கொடிக்கும் என்ன உறவு? என்ன பிணைப்பு? என்ன சம்பந்தம்... ஒன்றுமேயில்லை... மனிதம் மட்டும்தான்...
சேய்களை காத்த அன்னை
"3 சேய்களை காத்த அன்னை" என்று அன்று கவிஞர் வாலி புகழாரம் சொன்னார். அது முற்றிலும் தற்போது உண்மையாகிவிட்டது. 23 வயது பெண் திருமணம், குழந்தை, குட்டி என்று எதுவுமே இல்லாமல் 7 பேருக்கும் உயிரூட்டிய தாயாகிவிட்டாள். 7 பேரின் விடுதலை நிச்சயமாகிகொண்டு வருகிறது. 7 பேரில் ஒருவரான பேரறிவாளனின் இல்ல சுவரில் "‘செங்கொடி இல்லம்' என்ற பெயர்ப் பலகை காற்றில் அசைந்தாடி, நீதிமன்ற தீர்ப்பை இனிதே வரவேற்று வருகிறது!