செங்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்திய வணிக வாளக சுவர் இடிப்பு!
செங்கோட்டை: செங்கோட்டையில் பழமையான செங்கோட்டை நகராட்சி வணிக வாளகத்தை இடித்த போது சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகிய சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்தால் நேற்று மாலையில் செங்கோட்டை பஸ் நிலையப் பகுதியில் பெரும் சலசலப்பு நிலவியது.
பஸ் நிலையம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான வணிக வாளகம் உள்ளது. இந்த வணிக வாளகம் கடந்த 1982ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த வாளகத்தில் 8 கடைகள் இயங்கி வந்தன. தற்போது வணிக வாளகம் மிகவும் பழுதடைந்துள்ளதால் கடந்த 50 நாட்களுக்கு முன்பு கட்டிடத்தை இடிப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. செங்கோட்டையை சேர்ந்த நாகூர் என்பவர் டெண்டர் எடுத்திருந்தார்.
கட்டடம் இடிப்பு... சுவர் விழுந்து 3 பேர் பலி
இந்த நிலையில் நேற்று மாலை கட்டிடத்தை இடிக்கும் பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். முதல் தளத்தில் உள்ள சுவரை இடித்த போது எதிர்பாரவிதமாக அதில் தொழிலாளர் மீது சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி செங்கோட்டை கதிரவன் காலனியை சேர்ந்த முத்துகுமார், ராஜூவ், கணபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
போராட்டத்தில் மக்கள்
தகவல் அறிந்ததும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரின் உறவினர்களும், பொதுமக்களும் அங்கு கூடினர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். முத்துகுமார், ராஜூவ் உடலை போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கணபதியின் உடலை எடுக்க முயன்ற போது அவரது உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்டிஓ நேரில் வந்து பேச்சு
அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டர் மற்றும் நகராட்சி தலைவர் நேரில் வரவேண்டும் என்று அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தென்காசி ஆர்டிஓ ரொக்கோபயேம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலை கைவிடவில்லை. நகராட்சி அலுவலகம் எதிரேயும், வாஞ்சிநாதன் சிலை எதிரேயும், வனத்துறை அலுவலகம் எதிரேயும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பஸ்கள் ஸ்தம்பிப்பு
இதன் காரணமாக செங்கோட்டை உள்ளேயும், வெளியேயும் வாகனங்கள் வரமுடியவில்லை. சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதையடுத்து பஸ் நிலையம் அருகே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இரவு வரை மறியல் போராட்டம் நீடித்தது.
விரைந்து வந்த எஸ்.பி.
இதையடுத்து தூத்துக்குடி எஸ்பி துரை, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலையும், நிவாரணமும்
இறந்தவர்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய நிவாரணமும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதன் பின்னரே கணபதியின் உடலை எடுக்க பொதுமக்கள் அனுமதித்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
சோகத்தில் குடும்பங்கள்
இறந்த ராஜூவுக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். கணபதிக்கு கலா என்ற மனைவியும், காவ்யா என்ற மகளும், தருண் என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.