செங்கோட்டை- ஆரியங்காவு அகல ரயில் பாதை திறப்பு .. அமைச்சர் புறக்கணிப்பு
செங்கோட்டை- ஆரியங்காவு அகல ரயில் பாதை திறப்பு விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டை: செங்கோட்டை- ஆரியங்காவு அகல ரயில் பாதை திறப்பு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டை-புனலூர் இடையே 49.5 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 6 ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக இம்மார்க்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரயில்பாதைஅமைக்கும் பணிகள் வேகமெடுத்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.
இந்த பணிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்து மார்ச் மாதத்தில் ரயில்கள் இந்த வழி யாக ஓட துவங்கும் என ரயில்வே துறையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு வரை 20.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகல ரயில் பாதையில் கடந்த 24 முதல் 26-ஆம் தேதி வரை செங்கோட்டை- நியூ ஆரியங்காவு வழித்தடத்தில் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன்ஆய்வு நடத்தி ரயிலை இயக்க அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு இடையே அகல ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது.இதனை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு திறந்துவைத்தார்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கார்க் , தலைமை கட்டுமானபிரிவு பொறியாளர் கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன், தென்காசி வசந்தி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர்,செங்கோட்டை ரயில்பயணிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தத நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏவும்,அமைச்சருமான ராஜலட்சுமி கலந்து கொள்ளவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. அதேபோல இந்த மார்க்கத்தில் ரயிலை இயக்காமல் பாதையை மட்டும் திறந்து வைத்ததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.