செங்கோட்டை அருகே 7 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்... கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
செங்கோட்டை : புளியரை அருகே ரோந்துப் பணியின் போது தப்பி ஓடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்கள் எதற்காக நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு சென்றனர், அவர்களின் சதித்திட்டம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் கடந்த சில நாட்களாக காவல் துறையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் தெற்குமேடு பகுதியில் தென்காசி காவல் உதவி கண்காணிப்பாளர் அரவிந்தனின் உத்தரவின் பேரில் குரங்கன் ஓடை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காவலர்களை கண்டு 3 பேர் ஓடினர்.
அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடமிருந்து 7 சிறிய நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
அந்த நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு சென்ற தெற்குமேடு பகுதியை சேர்ந்த கருப்பசாமி, சரவணக்குமார், எபனேசர் ஆகியோரை கைது செய்து புளியரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் அதனை தோட்டத்தின் காவலுக்காக வும் பன்றிகளை கொல்வதற்காகவும் கொண்டு செல்வதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் தற்போது கைதான கருப்பசாமி வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது அது வெடித்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.