பேச்சுவார்த்தைக்காக எஸ்எம்எஸ் கூட அனுப்பினோம்.. ஒரு பதிலும் வரலியே.. கலங்கிய வைத்தியலிங்கம்
ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். ஆனால் அங்கிருந்து ஒரு பதிலும் வரவில்லை என்று அதிமுக அம்மா கட்சி எம்பி வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் ஒற்றுமைக்காக தங்கள் அணி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
எந்தவித நிபந்தனைகளும் இன்றி அமர்ந்து பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றும் ஓபிஎஸ் அணியினர் பேச வரவேண்டும் என்றும் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
பிரிந்துபோன இரு அணிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஓபிஎஸ் அணி சார்பிலும் எடப்பாடி பழனிசாமி அணி சார்பிலும் தனித்தனியாக இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
குழப்பம்
இரு அணியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, தீர்வு கண்டபாடில்லை. இதனால் பிரச்சினைகளும், சிக்கல்களும் மேலும் மேலும் அதிகரிக்கின்றன.
முட்டுக்கட்டை
இன்று இரு அணிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி, பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதை மீண்டும் செய்தியாளர்களைக் கூட்டி தெரிவித்தார்.
தயார்
இதனைத் தொடர்ந்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம் கூறினார். ஓபிஎஸ் அணியினர் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம் என்றும் அறிவித்தார்.
எஸ்.எம்.எஸ்
அப்போது தனது செல்போனை காட்டி பேச்சுவார்த்தை தொடர்பாக எஸ்.எம்.எஸ் கூட அனுப்பினோம். ஆனால் அங்கிருந்து ஒரு பதிலும் வரவில்லை என்றும், இதுகுறித்து மனோஜ் பாண்டியனும் ஒன்றும் பேசவில்லை என்றும் செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் கூறினார்.