ஏ.கே. போஸ், செந்தில் பாலாஜி, ரெங்கசாமி எம்.எல்ஏக்களாக இன்று பதவியேற்பு
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருந்து புதிதாக வெற்றி பெற்ற 3 பேர் இன்று எம்.எல்ஏக்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
சென்னை: அரவக்குறிச்சியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற ஏ.கே. போஸ், தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்ற ரெங்கசாமி ஆகியோர் இன்று சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால், அவரது அறையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து அமைச்சர்கள், அதிமுக உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக சட்டமன்றத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நவம்பர் 19ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 22ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மூன்று தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி, ஏ.கே. போஸ், ரெங்கசாமி ஆகியோர் 23ம் தேதி அப்பல்லோ சென்று சசிகலாவை சந்தித்தனர்.
வெற்றி பெற்ற மூன்று பேரும் எம்.எல்.ஏ.க்களாக சபாநாயகர் அறையில் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் இலாகாக்களை கவனிக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த உடன் மூவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது 134 தொகுதிகளை வென்றது அதிமுக. சீனிவேல் பதவியேற்கும் முன்பாகவே மரணமடைந்தார். இன்று மூன்று எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதன் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.