செந்தில் பாலாஜியின் நண்பரின் நிதி நிறுவனத்துக்கு சீல்.. உறவினர்களின் ரூ.60 கோடி வரிஏய்ப்பு அம்பலம்
செந்தில் பாலாஜியின் நண்பருக்கு சொந்தமான நிதி நிறுவனத்துக்கு வருமான வரித் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பருக்குச் சொந்தமான நிதி நிறுவனத்துக்கு வருமான வரித் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி. அவர் தினகரனின் தீவிர ஆதரவாளராவார். முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்று கூர்கில் இருந்து வந்தார். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் செந்தில் பாலாஜியின் பதவி பறிபோனது.
இந்நிலையில் ஜெயலலிதா அமைச்சரவையில் கடந்த 2011-2016 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4.25 கோடி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு, கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாள்களாக சோதனை நடத்தி வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் சரவணனின் நிதி நிறுவனத்துக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர். இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறையினர் அறிவிப்பர்.
கரூரில் அரசு ஒப்பந்ததார் சங்கர் வீட்டிலும், செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் ரூ.60 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.