உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு செந்தில்பாலாஜி மனு... எடப்பாடிக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
கரூர் மாவட்டம் குச்சிப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உண்ணாவிருதம் இருக்க முடிவு செய்துள்ளார்.
கரூர்: குச்சிப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 5ஆம் தேதி உண்ணாவிருதம் இருக்க முடிவு செய்துள்ளார். இதற்கு அனுமதிக் கோரி கரூர் டிஎஸ்பி அலுவலகத்தில் செந்தில் பாலாஜி மனு அளித்துள்ளார்.
கரூர் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக்கல்லூரி வரவிடாமல் தடுப்பதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது செந்திபாலாஜி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அவர்கள் இருவரின் செயலை கண்டித்து கரூரில் மே 5 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க உள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிக்கக் கோரியும், கரூர் டிஎஸ்பி.யிடம் புதிய மனு ஒன்றை அளித்துள்ளார். புதிய மனுவை இரண்டு நாளில் பரிசீலித்து முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குப்பச்சிபாளையத்தில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்ககோரி செந்தில்பாலாஜி போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கட்சியில் இருப்பவர்களை எதிர்த்து அவர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.