ரூ.60 லட்சம் பண மோசடி வழக்கு தள்ளுபடி... அப்போ அரவக்குறிச்சி செந்தில் பாலாஜிக்குத்தானா?
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.60 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள செந்தில் பாலாஜி தனது மகிழ்ச்சியை முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 3 பேர் மீதான புகாரில், சிவகங்கை போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சுப்பையா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014- ஆம் ஆண்டில், காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநராக இருந்த பாபு என்பவர், பணம் கொடுத்தால் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இவரது பேச்சை நம்பி, தமது வங்கிக் கணக்கு மூலம் 38 பேர் பணம் கொடுத்ததாகவும், ஆனால் பணம் கொடுத்த யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார். இந்த மோசடியில் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்கள் பாபு, ரங்கராஜ் ஆகியோரும் ஈடுபட்டதாகவும், எனவே செந்தில்பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விமலா, சம்மந்தப்பட்டவர்கள் மீதான புகாருக்கு ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் போதிய முகாந்திரம் இல்லை என கூறி, வழக்கினை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால் மனுதாரர் சுப்பையா என்பவரது வங்கிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதற்கு ஆவணங்கள் இருப்பதால், போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி விமலா உத்தரவிட்டார்.
சந்தோச பகிர்வு
இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் செந்தில் பாலாஜி. கடந்த 2011ம் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறைக்கு அமைச்சராக இருந்தவர் கரூர் செந்தில்பாலாஜி. அதிமுகவில் செல்லப்பிள்ளையாகவும் வலம் வந்தார். ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னர் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி
கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். திடீரென கட்சியில் இருந்து டம்மியாக்கப்பட்டார். சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. ஆனால், அரவக்குறிச்சி தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையமே தள்ளி வைத்துவிட்டது. இதற்கிடையில் செந்தில் பாலாஜி மீது பல சர்ச்சைகள் கிளம்பியது.
செந்தில் பாலாஜி போட்டி உறுதி
அரவக்குறிச்சி தொகுதிக்கு மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு கிடைக்காது என்று அதிமுகவினர் சொல்லி வந்தனர். அதற்கேற்றார்போல அவர்மீது மோசடி புகார்கள் வரிசைக்கட்டின. இப்போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் மணல் மனிதர் பழனிச்சாமியை எதிர்த்து அவர் ஜெயித்தால் மட்டுமே சட்டசபைக்குள் மீண்டும் அடியெடுத்து வைக்கமுடியும்.