முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் தகனம்- மகன்கள் தீ மூட்டினர்
செங்கோட்டை: முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் தகனம் இன்று நடந்தது. அவரது உடலுக்கு மகன்கள் தீ மூட்டினர்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தவர் செந்தூர் பாண்டியன். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் செந்தூர் பாண்டியன் காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சராகவும், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்ஆகவும், பதவி வகித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி செந்தூர் பாண்டியன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அடையாறு வீட்டுக்கு புறப்பட்டபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலை மேலும் மோசமானதால், அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 6 மாதங்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை நீண்ட நாட்கள் நீடித்ததால், அவர் வகித்து வந்த இந்து சமய அறநிலையத்துறை, உணவு அமைச்சர் காமராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் செந்தூர் பாண்டியன் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார். பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்றபோது செந்தூர் பாண்டியன் விடுவிக்கப்பட்டார்.
சமீபத்தில் அவருக்கு சளித்தொல்லை அதிகரித்தது. நேற்று முன்தினம் அவருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவரது உடல்நிலை மேலும் மோசமானது. நேற்று காலை 6.50 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
செந்தூர் பாண்டியன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் நேற்று அமைச்சர்கள் பன்னீர் செல்வம் உள்பட பல அமைச்சர்கள்,அ.தி.மு.க. நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து அவரது உடலை அவரது மகன் அய்யப்பராஜிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர்.மேலும் அதிமுக தலைமைக்கழகம் சார்பில் அதிமுக நிகழ்சிகள் அனைத்தும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
செந்தூர் பாண்டியனின் உடல் இறுதி சடங்குக்காக அவரது சொந்த ஊரான செங்கோட்டைக்கு நேற்று அப்பல்லோ மருத்துவ மனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் நேற்று இரவு 11.30க்கு கொண்டுவரப்பட்டது. நள்ளிரவு நேரமானாலும் எராளமானவர்கள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தியவண்ணம் இருந்தனர். இன்று செங்கோட்டையில் செந்தூர் பாண்டியன் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு செய்யப்பட்டது.
இன்று காலை சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத் குமார் , அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ரமணா, சுந்தரராஜ், மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன், ராஜ்யசபா உறுப்பினர் மனோஜ் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கடம்பூர் ராஜ், முத்துசெல்வி, இசக்கி சுப்பையா, பி.ஜி.ராஜேந்திரன், துரையப்பா, எர்ணாவூர் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி பாண்டியன், சதன் திருமலைக்குமார், நெல்லை மேயர் புவனேஸ்வரி, முன்னாள் எம்.பி.ராமசுப்பு, செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் மோகன கிருஷ்ணன், வைகோ வின் தம்பி இரவிசந்திரன் மற்றும் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளூர் அனைத்துக் கட்சித் தலைவர்கள், பொது நல அமைப்பினர் பொதுமக்கள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காலை 11.மணிக்கு செங்கோட்டை வம்பளந்தான் முக்கு அருகிலிருக்கும் அவரது வீட்டிலிருந்து அவரது இறுதி ஊர்வலம் வாகனம் மூலம் புறப்பட்டது. 7 கிலோ மீட்டர் தொலைவில் செங்கோட்டை அருகே கற்குடி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்திற்கு ஆயிரக்கணக்கனோர் கலந்துக் கொண்டு ஊர்வலமாக செல்லப்பட்டு அங்கு அமைக்கப்பட்ட தகன மேடையில் அவரது உடல் வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கருணாகரன்,நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தனர். அதன் பின்பு அவரது மகன்கள் அய்யப்பராஜ், கிருஷ்ண முரளி ஆகியோர் அவரது உடலுக்கு தீ மூட்டினர்.