நாடு முழுவதும் நீதிபதிகள் உள்ளிட்ட விஐபிகளுக்கு சுங்கச் சாவடிகளில் தனி வழி.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Recommended Video
சென்னை: நாடு முழுவதிலுமுள்ள சுங்க சாவடிகளில் (toll plazas) நீதிபதிகள் உள்ளிட்ட விஐபிகளுக்கு தனி வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை மீறினால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு விழுப்புரம் மற்றும் சேலம் வட்டார அரசுப் போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டிய சுங்க கட்டண நிலுவையை செலுத்துவது தொடர்பாக கிருஷ்ணகிரி-வாலாஜாபேட் எல்அன்டுடி டோல்வே நிறுவனத்தால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
"விஐபிகள், பணியில் உள்ள நீதிபதிகள் டோல் பிளாசாக்களில் காக்க வைக்கப்படுகிறார்கள். 10 முதல் 15 நிமிடங்கள், சுங்க சாவடிகளில் வீணடிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. எனவே, பணியிலுள்ள நீதிபதிகள், விஐபிகளுக்கு டோல் பிளாசாக்களில் தனி வழி ஏற்படுத்த வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி செய்யாவிட்டால், நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருக்கும் டோல் பாதைகளில் ஒன்று விஐபிகளுக்கு ஒதுக்கப்பட்டால் மற்ற பாதைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக வாகனங்கள் முந்தியடிக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இதை டோல் பிளாசா நிர்வாகங்கள் எப்படி சமாளிக்கப்போகின்றன என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.