ஓமலூரில் புதுமை... திருநங்கையருக்கு தனி கழிப்பறை வசதி... பின்பற்றுமா மற்ற பேரூராட்சிகள்?
ஓமலூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் திருநங்கையருக்கென தனி கழிப்பறை வசதியை ஏற்படுத்தி ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் புதுமையை செய்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறை உள்ளது. அதன் அருகே, திருநங்கையர் மட்டும் பயன்படுத்த கூடிய வகையில் கழிவறையையும், குளியலறையையும் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் திருநங்கையர் நலச்சங்கம் சார்பில் தங்களுக்கென தனி கழிவறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மனு ஒன்றை அளித்திருந்தனர்.
இதனையடுத்து, இந்தியாவிலேயே, தமிழகத்தில் முதன் முதலாக, ஓமலூரில் திருநங்கையர்களுக்கென தனியான கழிவறை மற்றும் குளியலறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவறையில் மின் விளக்கு வசதி, 24 மணிநேரம் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த இடத்தை, கடந்த, 24ம் தேதி சேலம் கலெக்டர் சம்பத் ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னர், இதன் திறப்பு விழா நடைபெறும் என்று ஓமலூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருநங்கையர் நலச் சங்க தலைவி பூஜா, "சேலத்தில், 2,100 திருநங்கையர் உள்ளோம். முதன் முறையாக, ஓமலூரில் எங்களுக்கென, தனியாக கழிவறையுடன் கூடிய குளியலறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.