செப்-2 ல் பேருந்து, லாரி, கார், வேன், ஆட்டோக்கள் "பந்த்".. புதிய மோட்டார் வாகன சட்டதிற்கு எதிர்ப்பு
சென்னை : புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, வருகிற 2-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இதனால் தமிழகத்திலும் பேருந்து, லாரி, ஆட்டோ, கார், வேன் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதனை கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதை கண்டித்து வருகிற 2-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
தமிழகத்திலும் இந்த வேலை நிறுத்தத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., டி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி., எம்.எல்.எப்., தே.மு.தி.க., திராவிடர், பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இதனால் 2-ந்தேதி தமிழகத்தில் லாரி, கார், வேன், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சாலை போக்குவரத்து பாதுகாப்பு சம்மேளன மாநில தலைவர் ஆறுமுக நயினார் கூறியதாவது...
மத்திய அரசு கொண்டு வரும் சாலை போக்குவரத்து மசோதா உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் வேலை நிறுத்தத்தில் ஆளுங்கட்சி தவிர பிற சங்கங்கள் அனைத்தும் கலந்து கொள்கின்றன.
லாரி உரிமையாளர்கள், மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம், கேஸ் லாரி உரிமையாளர் சங்கம், மணல் லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
இதனால் 2-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பேருந்து, லாரி, டூரிஸ்ட் கார், வேன், ஆட்டோக்கள் ஓடாது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களும் பங்கேற்பதால், தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பாதிக்கும் என கூறப்படுகிறது.