செல்போனை திருடிய நபரை புயல் வேகத்தில் துரத்திச் சென்று போனை வாங்கிய செரினா வில்லியம்ஸ்
சென்னை: உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் தனது செல்போனை திருடிய நபரை விரட்டிச் சென்று போனை பெற்றுள்ளார்.
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்நியாக்கி ஆகியோருடன் சீன உணவகத்திற்கு சென்றுள்ளார்.
உணவகத்தில் அவர் செல்போனை ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து செரினா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
செல்போன்
நேற்று உணவகத்தில் சாப்பிடுகையில் ஒரு விஷயம் நடந்தது. உணவகத்தில் சாப்பிடுகையில் ஒரு ஆண் என் அருகே நின்று கொண்டிருந்தார். எனக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டதால் ஓரக்கண்ணால் அவரை கண்காணித்தேன். என் செல்போன் நாற்காலியில் இருந்தது.
யார்?
அந்த நபர் என் அருகே வெகுநேரம் நின்று கொண்டிருந்தார். அவர் வாடிக்கையாளரா, கழிவறைக்கு செல்ல காத்திருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது.
திருட்டு
அந்த நபர் திடீர் என்று என் செல்போனை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த தான் ஓமைகாட் அந்த நபர் என் செல்போனை திருடிவிட்டார் என்று கூச்சலிட்டேன்.
துரத்திப் பிடித்தேன்
உடனே நான் அந்த நபரை துரத்திச் சென்றேன். நான் வேகமாக ஓடி அந்த நபரை பிடித்தேன். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் திகைத்துப் போனார். தெரியாமல் என் செல்போனை எடுத்து வந்துவிட்டாரா என்று நான் அவரிடம் கேட்டேன். உடனே அவர் தான் தவறாக என் செல்போனை எடுத்து வந்ததாக தெரிவித்தார்.
கைதட்டல்
என் செல்போனுடன் நான் உணவகத்திற்கு திரும்பி வந்தபோது அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். உங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பெண் என்பதால் எதற்கும் பயப்படாதீர்கள் என்று செரினா தெரிவித்துள்ளார்.