3 வாரத்தில் 7 கொலைகள்… 2 பெண்கள் பலாத்காரம்: சேலத்தில் 'சைக்கோ' கைது
சேலம்: கடந்த 3 வாரங்களில் 2 பெண்களை பலாத்காரம் செய்து 7 பேரை கொலை செய்த வழக்கில், சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ‘சைக்கோ' கொலையாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (45), பீடா கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அவரது கடைக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்துள்ளார்.
செல்வத்தை, அந்த மர்ம நபர் அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சித்துள்ளார். செல்வம் கூச்சல் எழுப்பியதை யடுத்து திரண்டு வந்த அக்கம்பக்கத்தினர், இளைஞரை பிடித்து, தலைவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கடந்த மூன்று வாரங்களில் 7 கொலைகளை அவன் செய்தது தெரியவந்தது.
பாட்டி கொலை வழக்கில்
சேலம் அருகே கத்திரிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராயன் (27) என்ற அந்த நபர், கடந்த 2012-ம் ஆண்டு தனது பாட்டியை பணத்துக்காக கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலையான கொலையாளி
கடந்த ஒரு மாதத்துக்கு முன், சிறையில் இருந்து வெளியே வந்த சுப்புராயன், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் உள்ள கல்குவாரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
பெண் பலாத்காரம்
கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி குவாரி அருகே தனியாக வசித்து வந்த சின்னத்தாய் என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரைக் கொலை செய்துள்ளார். வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரத்தை திருடிக்கொண்டு திருச்சி சென்றுள்ளார்.
மூதாட்டி கொலை
ஆகஸ்ட் 21-ம் தேதி டால்மியாபுரம் கல்லக்குடியில் ஜெயமேலு (82) என்ற மூதாட்டியை கொலை செய்து ஆயிரம் ரூபாய் திருடியுள்ளார்.
2 பெண்கள் கொலை
அரியலூர் மாவட்டம் கைரலாபாத் கிராமத்தில் தனியாக வசித்து வந்த லட்சுமி (75), சாவித்திரி (50) ஆகிய இருவரைக் கொலை செய்த சுப்புராயன், வீட்டில் இருந்த பணத்தை திருடி தப்பியுள்ளார்.
4 பேர் கொலை
கடந்த 5-ம் தேதி அரியலூர் சேந்தமங்கலத்தில் வேல்முருகன் என்பவர் வீட்டில் புகுந்த சுப்புராயன், அவரை கொலை செய்து, அவர் மனைவியையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். அவர்களது இரண்டு வயது குழந்தையையும் கொலை செய்துள்ளார்.
7 பேர் கொலை
23 நாட்களில் 7 பேரை கொலை செய்த சுப்புராயன், ரிக் வண்டியில் வேலை செய்து வந்துள்ளார். இச்சூழலில் பாட்டி கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சுப்புராயனுக்கு வேலை எதுவும் கிடைக்காததால், சைக்கோ போல் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.