சாலையில் படுத்திருந்த முதியவரை எரித்து கொலை செய்ய முயற்சி.. பரபர வீடியோவால் அதிர்ச்சி.. 4 பேர் கைது
சாலையோரத்தில் முடியாமல் மயக்க நிலையில் படுத்திருந்த முதியவரை எரித்து கொலை செய்ய முயன்ற 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: கோடம்பாக்கத்தில், சாலையின் ஓரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது அங்கிருந்து சிறுவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சாலையில் கடந்த 4-ம் தேதி அன்று ஜப்பார் என்ற முதியவர் மயக்க நிலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி காகிதங்களை போட்டு தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.
முதியவரை எரிக்க முயன்ற போது யாரோ மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் காமராஜர் காலனியைச் சேர்ந்த ஷியாம், டெம்போ டிரைவர் புகழேந்தி மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் விசாரணையில், ஷியாமின் அம்மாவை குடிபோதையில் ஜப்பார் திட்டியதாகவும் அதனால், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் ஷியாம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 2 சிறுவர்கள் புரசைவாக்கம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஷியாம் மற்றும் புகழேந்தியை புழல் சிறையில் போலீசார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.