சசிகலா புஷ்பாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீடிக்க ஹைகோர்ட் கிளை மறுப்பு
வக்கீல் சுகந்தி வீடு தாக்கப்பட்ட வழக்கில் ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துள்ளது
மதுரை: வக்கீல் சுகந்தி தாக்கப்பட்ட வழக்கில் சசிகலா புஷ்பாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. நவம்பர் 9ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவின் வீட்டில் இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகிய இருவரும் வீட்டு வேலை செய்து வந்தனர். அப்போது, சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர். இதன்பேரில் சசிகலாபுஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புகார் கூறிய பணிப்பெண்களுக்கு ஆதரவாக திசையன்விளையைச் சேர்ந்த வக்கீல் சுகந்தி ஜெய்சன் ஆஜராகி வந்தார்.
கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி சுகந்தி ஜெய்சனின் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் எல்.பிரதீப்ராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இந்த வழக்கில் கைதான மூவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எங்களை வழக்கில் சேர்க்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர் வழக்கறிஞர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹரிநாடார், ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் சார்பில் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்கவும், ஹரிநாடார் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கவும் ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
கூடுதல் அட்வகேட் ஜெரனல் வாதிடும்போது, ராக்கெட் ராஜா தூண்டுதல் பேரில் வழக்கறிஞர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனுதாரர் தரப்பு ஆவணங்கள் அரசு தரப்புக்கு வழங்கவில்லை. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். இதனால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர், அரசு தரப்புக்கு ஆவணங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரம் உள்ளது. இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகிறது. ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும் போது ஒருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அரசு தரப்பில் விசாரணையை வேண்டும் என்றே தாமதம் செய்யப்படுகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு ஏற்கெனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தரப்பில் அரசு தரப்புக்கு ஆவணம் வழங்கப்பட்டதற்கு அத்தாட்சி உள்ளது. இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றம், மனுதாரர் தரப்பு, புகார்தாரர் தரப்பில் தயாராக இருக்கும் நிலையில், அரசு தரப்பில் மட்டும் கால அவகாசம் கோரப்படுகிறது என்றார். பின்னர் விசாரணையை நவம்பர் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அப்போது அதுவரை சசிகலா புஷ்பா உள்ளிட்டோரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 2 நாளில் ஒன்றும் நடைபெறாது. நவம்பர் 9ம் தேதியும் வழக்கை ஒத்திவைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், மனுதாரர்களை கைது செய்ய தடை விதிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.