சேது சமுத்திர கால்வாய் திட்டத்தால் பலருக்கு வேலை கிடைக்கும்- கி.வீரமணி
இதைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ஏதோ தோல்வித் திட்டம் என்பதைப் போலவும், சுற்றுச் சூழலுக்கும், மீனவர்களுக்கும் கேடு விளைவிக்கும் திட்டம் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார்.
நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சார்புப் பொறியியல் ஆய்வு நிலையம் ஆய்வு செய்து தொழில் நுட்ப ரீதியாக தந்த தகவல்கள் ஒப்புதலின் அடிப்படையிலேயே இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
அதில் தகுந்த கால்வாய் ஏற்படுவதால் நீரோட்டத்தின் விசை திசை மாறுமா என்று ஆய்வுகள் மேற்கொண்டதில் விசையிலும், திசையிலும் எவ்வித மாறுதல்களும் இருக்காது என்று நிரூபித்துள்ளது. கடற்கரை மாவட்டங்களில் நடைபெற்ற பல கூட்டங்களில் கலந்து கொண்ட மீனவர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மீன்வளம் பாதிக்காது என்றே கூறி உள்ளனர்.
மேலும் ஷிங்கிலி தீவுக்கு அருகில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திற்குள் காணப்படும் பவளப்பாறைகள் நலமாகவும் வளமாகவும் உள்ளன.
சேது கால்வாய்த்திட்டம் அதைச்சார்ந்த மற்ற சிறு திட்டங்களால் நேரடி வேலை வாய்ப்பு மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 10 ஆயிரம் பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் 50 ஆயிரம் பேர்களுக்கு நேர்முக மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
சேது சமுத்திரக்கால்வாய் இந்திய இலங்கை கடல் எல்லையைச் சார்ந்து அமையப் போவதால் எல்லை தெரியாமல் மீனவர்கள் இலங்கைக் கடல்பகுதியில் சென்று அங்குள்ள கடற்படையினரிடம் அவதிக்குள்ளாகும் நிலை மாறும்.
மேலும் இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு அடையும் இதனால் எல்லாத் துறைமுகங்களிலும் வேலை வாய்ப்பும் அதைச்சார்ந்த பகுதிகளில் தொழில் உற்பத்தியும் பெருகும்.
தமிழகக் கடலோர வணிகமும் பன்னாட்டு வணிகமும் சிறக்கும்.இதனால் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இப்போது இருக்கும் சிறு துறைமுகங்கள் பெருமளவில் வளர்ச்சி அடையும். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும்.
தமிழ்நாட்டு மக்கள் 150 ஆண்டு காலமாக எதிர்பார்க்கும் ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்வோடும் ராமன் பெயரை சொல்லியும் தடுத்திடும் அ.தி.மு.க.வையும், இந்துத்துவா கண் கொண்டு பார்த்து ராமர் பாலத்தைத் தகர்க்கக் கூடாது என்று கூறி திட்டத்தை முடக்கும் பா.ஜ.க மற்றும் அதற்கு துணைபோகும் கூட்டணி கட்சிகளையும் தமிழக மக்கள் அடையாளம் கண்டு நடக்க இருக்கும் 16 ஆவது மக்களவைத் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.