அதிமுக கூட்டணியைவிட்டு வெளியேறிய சேதுராமன் மு.க. ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் சேதுராமன் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை திடீரென இன்று சந்தித்து பேசினார். மேலும் திமுகவுடனான கூட்டணி குறித்து 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் சேதுராமன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகம் இடம்பெற்றிருந்தது. தேர்தல் கூட்டணி தொடர்பாக அதன் தலைவர் சேதுராமனை அழைத்து ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தியும் இருந்தார்.
ஆனால் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த ஜெயலலிதா, மூவேந்தர் முன்னணிக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சேதுராமன், கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் திடீரென திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார் சேதுராமன். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேதுராமன் திமுக உடனான கூட்டணி குறித்து 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 176 இடங்களில் போட்டியிட உள்ளது. இதனிடையே மூவேந்தர் முன்னணி கழகத்துக்கும் சில தொகுதிகளை திமுக ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.