கொடுமுடி காவிரி ஆற்றின் குறுக்கே மண் பாதை.. 3 பேர் கைது.. பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
கொடுமுடி காவிரி ஆற்றில் குறுக்கே பாதை அமைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
ஈரோடு: ஈரோடு அருகே காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக அமைத்த மண் பாதை இன்று முழுமையாக அகற்றப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 3 பேரையும் வருவாய்துறை,பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கொடுமுடி அருகே கருவேலம்பாளையம் என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை இணைக்கும் வகையில் பரிசல் இயக்க ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதில் தண்ணீரின் வரத்து குறைவாக இருப்பதை பயன்படுத்தி காவிரியின் குறுக்கே ராட்சத குழாய்களை வைத்து தற்காலிக தரைபாலம் அமைத்த சிலர் வாகனங்களுக்கு பணம் பெற்று கொண்டு வாகனங்களுக்கு சுங்கம் வசூலித்துள்ளனர். நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும் இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் இந்த சாலையை கடக்க கட்டணம் நிர்ணயம் செய்து வசூலித்துள்ளனர்.
இந்த பகுதியில் ஈரோடு நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் காவிரி பாலம் இல்லாததால் அதிக அளவிலானோர் இந்த வழியில் பயணம் செய்திருக்கிறார்கள். இது குறித்த தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு வந்த கொடுமுடி வட்டாச்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் தற்காலிக பாலத்தை நேற்றுமுன்தினம் அகற்றினர். ஆனால் மீண்டும் அதேபகுதியில் மீண்டும் பாலம் அமைத்து வசூலை தொடங்கினர். இதுகுறித்த தகவலறிந்த வருவாய்துறை,பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் இன்று பாலத்தை முழுமையாக அகற்றியதுடன், சாலை அமைக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் கொடுமுடி காவிரி ஆற்றில் குறுக்கே மண் பாதை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கார்த்திகேயன், கருப்பண்ணன் மற்றும் கபூர்கான் ஆகியோரையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.