விடாமல் துரத்தி வந்த சேவற்கொடியான்... பெரும் சிக்கலில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ்
மதுரை: பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனம் இப்போதுதான் பெரும் கண்டத்தில் சிக்கியிருப்பதாக கூறுகிறார்கள். காரணம், இதுவரை அவர்கள் மீது இருந்து வந்த புகார்கள் அனைத்துமே பொருளாதாரக் குற்றம் தொடர்புடையவைதான். ஆனால் இப்போது வந்திருப்பதோ நரபலி புகார். இது மட்டும் நிரூபணமானால் பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமிக்கு மிகப் பெரிய தண்டனை கிடைக்கும் என்பது உறுதி. பி.ஆர்.பிக்கு இந்த அளவுக்கு நெருக்கடி ஏற்பட காரணம் சேவற்கொடியான் என்ற அவரது நிறுவனத்தின் முன்னாள் டிரைவர்தான்.
மிகத் துணிச்சலாக தொடர்ந்து பி.ஆர்.பி. நிறுவனத்தின் நரபலி தொடர்பாக புகாருடன் போராடி வருகிறார் சேவற்கொடியான். பல வருடங்களாக இதுதொடர்பாக அவர் புகார் கூறியும் கூட அதற்கு விமோச்சனம் பிறக்காமலேயே இருந்து வந்தது. ஆனால் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்தான் சேவற்கொடியானின் புகாரைக் காது கொடுத்து கேட்டு, அதில் "வேல்யூ" உள்ளது என்பதை உணர்ந்து அதிரடியாக சுடுகாட்டுக்கே போய் சம்பந்தப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்க்க உத்தரவிட்டு பி.ஆர். பி குழுமத்தினரை அதிர வைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் கீழவளவு கிராமத்தில் உள்ள பிஆர்பி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தவர் சேவற்கொடியான். கடந்த 2003ம் ஆண்டு வேலையை விட்டு நி்ன்று விட்டார். காரணம் உயிர்ப் பயம். அந்தப் பயம் வரக் காரணம் பிஆர்பி நிறுவனத்தினர் செய்து வந்த சில வேலைகள்.. அதுதான் நரபலி. துடிக்கத் துடிக்க மனித உயிர்களைப் பலி கொடுத்ததை கண்ணால் பார்த்ததாகவும், அதற்கு மேலும் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க பிடிக்காமல்தான் வேலையை விட்டு நின்று விட்டதாகவும் கூறி அதிர வைக்கிறார் சேவற்கொடியான்.
1999 முதல் 2003 வரை
1999ம் ஆண்டு முதலே பிஆர்பி நிறுவனத்தினர் நரபலி கொடுத்து வருவதாக கூறுகிறார் சேவற்கொடியான். தான் வேலை பார்த்த 2003ம் ஆண்டு வரை இது தொடர்ந்ததாகவும் கூறுகிறார் இவர்.
முக்கிய முடிவுகளின்போது
நிறுவனம் முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும், புதிதாக எதையாவது தொடங்கும் முன்பும் நரபலி கொடுப்பது வழக்கம் என்று கூறுகிறார் சேவற்கொடியான்.
பெரும் போராட்டம்
இதுதொடர்பாக முன்னாள் மதுரை மாவட்ட கலெக்டர் அன்ஷுல் மிஸ்ராவிடமும், அப்போதைய எஸ்பி பாலகிருஷ்ணனிடமும் இவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் பலன் இல்லை. இந்த நிலையில்தான் சகாயத்தை நேரில் சந்தித்து அவர் புகார் கொடுத்தார். அதைப் பரிசீலித்த சகாயம் அதிரடியாக சம்பவ இடத்திற்கே சென்று முகாமிட்டு தோண்டச் செய்து அதிர வைத்து விட்டார்.
நான்கு எலும்புக் கூடுகள்
சேவற்கொடியான் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டியபோது 4 எலும்புக் கூடுகள் சிக்கின. அதில் ஒன்று சிறுமியின் எலும்புக் கூடு என்று கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் பூஜை செய்யப்பட்ட பொருட்களைப் புதைத்ததும், துணி இருந்ததும் தெரிய வந்துள்ளது.
5 வருடமாக சுடுகாடு
சம்பந்தப்பட்ட இடம் கடந்த 5 வருடமாக சுடுகாடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த இடத்தில் கிடைத்த எலும்புக் கூடுகள் நரபலி கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.
நரபலிதான்
ஆனால் சேவற்கொடியான் கூறுகையில், பிஆர்பி அதிகாரிகள் நரபலி கொடுத்தது உண்மைதான். அவர்கள் பெரும்பாலும் மன நலம் பாதித்தவர்களைத்தான் நரபலி கொடுப்பார்கள். தெருக்களில் திரிவோரைப் பிடித்து வந்து கொலை செய்வார்கள்.
தொண்டையைக் கிழித்துக் கொல்வார்கள்
சாமி சிலை முன்பு அந்த பரிதாபத்துக்குரிய நபர்களை நிறுத்தி வைத்து ஆடுகளை வெட்டுவது போல தொண்டையைக் கிழித்துக் கொலை செய்வார்கள். புதுக்கோட்டை, சிவகாசி, சித்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களைத்தான் கொன்றுள்ளனர்.
லாரியில் கூட்டி வருவார்கள்
பிஆர்பி குவாரிக்குச் சொந்தமான லாரியில் வைத்து இவர்களைக் கொண்டு வந்து நரபலி கொடுத்தனர். இவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப் போவதாக கூறித்தான் கொண்டு வந்தனர். ஆனால் பலி கொடுத்து விட்டனர்.
நானே 2 பேரை கூட்டி வந்தேன்
ஒருமுறை நானே 2 பேரை இவர்களுக்காக கூட்டி வந்தேன். ஆனால் உண்மையில் அவர்களைப் பலி கொடுக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் இருவரின் தொண்டைடையும் கிழித்துக் கொன்று பின்னர் பூஜை செய்து புதைத்தனர்.
12 பேரைக் கொன்றுள்ளனர்
எனக்குத் தெரிந்து ஒரு பெண் உள்பட 12 பேரை இவர்கள் கொன்று புதைத்துள்ளனர். அனைவருமே் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். இந்தப் புகாரை நான் முதன் முதலில் 2003ல் கூறினேன். அப்போது எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் நான் பயப்படவில்லை. தொடர்ந்து நியாயம் கிடைக்கப் போராடி வந்தேன் என்று கூறியுள்ளார் சேவற்கொடியான்.