விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு! பெற்றோர் பீதி!!
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பச்சிளம் குழந்தைகள் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 குழந்தைகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தன.
இந்தக் குழந்தைகளில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரின் 27 நாள் ஆன பெண் குழந்தை, திருக்கோவிலூரை அடுத்துள்ள ரெங்கராஜநல்லூரைச் சேர்ந்த இளையராஜாவின் 3 நாள் ஆன ஆண் குழந்தை, திருக்கோவிலூர் அருகே உள்ள ஏமபேர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் 4 நாள் ஆன ஆண் குழந்தை, சங்கராபுரம் பகுதி சீர்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முனியனின் 3 நாள் ஆன ஆண் குழந்தை ஆகிய 4 குழந்தைகள் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தன.
முதல் குழந்தை அதிகாலை 4.45 மணிக்கும் அதைத் தொடர்ந்து காலை 5.55, 7.05, 7.30 மணியளவில் 3 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்தன. இந்த 4 குழந்தைகளில் ரெங்கராஜநல்லூரைச் சேர்ந்த இளையராஜாவின் ஆண் குழந்தை மட்டும் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தையாகும். மற்ற 3 குழந்தைகளும் இந்த மருத்துவமனையிலேயே பிறந்த குழந்தைகளாகும்.
அதன் பின்னர் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உஷா சதாசிவம் கூறுகையில், குழந்தைகள் எடை குறைவாக பிறந்திருந்தன. அந்தக் குழந்தைகளுக்கு நாங்கள் தீவிர சிகிச்சை அளித்தோம். எனினும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. ஒரே நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் பெரிதாக பார்க்கப்படுகிறது என்றார்.