கமிஷனர் அலுவலகத்தில் பரபர.. மன்சூர் அலிகானுக்கு நியாயம் கேட்க சிம்புவுடன் வந்த ரசிகர்கள் கைது!
Recommended Video
சென்னை: கமிஷனர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியதாக சிம்பு ரசிகர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கடந்த 12ம் தேதி, கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டு பல்லாவரத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.
மாலை வெகுநேரமாகியும் சீமான் விடுதலை செய்யப்படாததை கண்டித்து, மண்டபம் எதிரே நடிகர் மன்சூர் அலிகான் தர்ணா நடத்தினார். அப்போது மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை மன்சூர் அலிகான் விடுதலை செய்யப்படவில்லை.
மன்சூர் அலிகான் கைது பற்றி விவரம் கேட்க நடிகர் சிலம்பரசன் இன்று கமிஷனர் அலுவலகம் வந்தார். அப்போது அவருடன் அனுமதியின்றி சில ரசிகர்களும் கமிஷனர் அலுவலகத்திற்குள் வந்துள்ளனர்.
இதையடுத்து அனுமதியின்றி கமிஷனர் அலுவலகத்திற்குள் கூட்டமாக ஒன்றுகூடியதற்காக, சிம்பு ரசிகர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.