இவ்வளவு பெரிய புயலிலும் அசையாத ஜெயலலிதா சமாதி மேற்கூரை! மணல் மூட்டை போட்டு வெள்ளம் புகாமல் தடுப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குள் தண்ணீர் புகுந்துவிடாமல் தடுக்க அதிகாரிகள் படாதபாடு பட்டனர்.
சென்னை: வர்தா புயல் சென்னை மற்றும் திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை பயங்கர அளவில் தாக்கியது. இதனால் கடற்கரை பகுதி வீடுகள் தண்ணீரில் மூழ்கியது.
அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியது. இதனால் கடற்கரை அருகேயுள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. சில வாகனங்கள் நீரில் மூழ்கிவிட்டது.
22 வருடங்களுக்கு பிறகு சென்னையை ஒரு புயல் கடந்தது என்றால் அது வர்தாதான். எனவே சமீபத்தில்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சமாதி அமைந்துள்ள இடத்தில் வெள்ளம் புகுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
எனவே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சமாதியை சுற்றிலும் மணல் மூட்டை அடுக்கப்பட்டு தண்ணீர் உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு வேகமாக காற்று வீசியபோதும், ஜெயலலிதாவின் சமாதிக்கு மேலுள்ள மேற்கூரை ஆடவோ, அசையவோ இல்லை. அதற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதனிடையே, பொதுமக்கள் இன்று வழக்கம்போல ஜெயலலிதா சமாதி இருக்கும் இடத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று சென்னை மாவட்டத்தில் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.