பிரபல இந்தி நடிகர் மகனின் திருமணம் நிறுத்தப்பட்டது.. ஊட்டியில் பரபரப்பு
மிதுன்சக்கரவர்த்தி மகன் திருமணம் இன்று நடைபெறவில்லை.
ஊட்டி: ஊட்டியில் நடக்கவிருந்த பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது.
இந்தி சினிமா உலகில் 80களில் கொடிகளில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களின் மிதுன் சக்கரவர்த்தியும் ஒன்று. இவர், சினிமா துறை மட்டுமின்றி, நட்சத்திர ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார். ஊட்டியில் இவருக்கு மொனார்க் (MONARCH) என்னும் பெரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. ஊட்டிக்கு ஷூட்டிங் வரும் பெரும்பாலானோர் தங்கும் ஹோட்டலாக முன்பு இருந்தது. இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் இங்கு வந்து தங்குவது வழக்கம்.
நட்சத்திரங்களின் அபிமான ஹோட்டல்
அதேபோல மிதுன்சக்கரவர்த்தி மேல் உள்ள நட்பினால், ஏராளமான பாலிவுட் நட்திரங்கள் இந்த ஹோட்டலில்தான் தங்கி ஷூட்டிங் செல்வார்கள். பாலுமகேந்திராவின் "மூன்றாம்பிறை" படப்பிடிப்பு முழுவதுமே ஊட்டிதான். அதனால் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் அந்த படம் முடியும்வரை இங்கு தங்கினார்கள். "இளமை ஊஞ்சலாடுகிறது" படப்பிடிப்புக்கு வந்த கமலுக்கு அப்போது மிகவும் பிடித்த ஹோட்டலாக இது இருந்தது. இதன்பின்னர் மிதுன் சக்கரவர்த்தி, மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் பகுதியில் பெரி ரெசார்ட் ஒன்றையும் கட்டினார்.
பாலியல் புகார்
இந்நிலையில், இவரது மகன் மகாக்ஷே மிமோ திருமணத்தை தனது நட்சத்திர ஹோட்டலிலேயே இன்று திருமணத்தை நடத்த திட்டமிட்டார். அதற்காக இவரது உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும், இவரது மகன் திருமணம் ஊட்டியில் நடப்பது உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் மீடியாக்களுக்கு கூட தெரியப்படுத்தவில்லை, இதனிடையே, மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மகாக்ஷே தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தான் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாகவும் ஏற்கனவே நடிகை ஒருவர் மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
ஹோட்டலில் விருந்து உபசரிப்பா?
இந்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் ஊட்டிக்கு விரைந்து வந்தனர். அவர்கள், மிதுன்சக்கரவர்த்தி மற்றும் அவரது மகனிடம் இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஊட்டியில் உள்ள அவரது நட்சத்திர ஓட்டலில் மடால்ஷா என்பவருடன் நடக்கவிருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும், இந்த பெண்ணின் குடும்பம் ஊட்டியில் இருந்து கிளம்பி விட்டதாகவும் தெரிகிறது. எனினும், தொடர்ந்து ஓட்டலில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகள் நடந்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
இந்த திருமணத்தை முன்னிட்டு ஹோட்டல் முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிதுன் சக்கரவர்த்தியின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் தவிர வேறு யாரும் உள்ளே இன்று அனுமதிக்கப்படவில்லை. திருமணம் தடைப்பட்டது தெரிந்து ஹோட்டலுக்கு பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க சென்றனர். எனினும், பத்திரிக்கையாளர்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.